Breaking

Thursday, December 07, 2023

தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்!



தேன்கூட்டை கலைக்க முயன்ற போது மாணவர் தீக்காயம்- தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்!

கோவையில் பள்ளி கட்டிடத்தில் இருந்த தேன் கூட்டை கலைக்குமாறு தலைமை ஆசிரியர் கட்டளையிட்ட நிலையில், தேன்கூட்டை கலைக்க முயன்ற சிறுவன் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவன் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியின் கட்டிடத்தில் தேன்கூடு கட்டியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த சந்துருவிடம் தலைமையாசிரியர் பழனிச்சாமி, கையில் தீப்பந்தத்தை கொடுத்து தேன் கூட்டை கலைக்குமாறு கூறியதாக தெரிகிறது.

ஆலாந்துறை அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி

இதனைத் தொடர்ந்து கையில் தீப்பந்தத்துடன் சென்ற சிறுவன் தேன்கூட்டை கலைக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக சந்துருவின் உடையில் தீ பற்றியது. இதில் சந்துருவின் அடிவயிறு மற்றும் பிறப்புறப்பு ஆகியவற்றில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். பள்ளியில் போலீசார் விசாரணை

இதனை தொடர்ந்து சிறுவன் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். படுகாயம் அடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஆலந்துறை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் மாணவ- மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது மாணவனை தேன் கூட்டை கலைக்க கட்டளையிட்டு மாணவனுக்கு தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog