Breaking

Showing posts with label தாய்மொழி. Show all posts
Showing posts with label தாய்மொழி. Show all posts

Wednesday, August 10, 2022

August 10, 2022

தேசிய, மாநிலக் கல்வி கொள்கைகளும் தாய்மொழி வளர்ச்சியும் - ஒரு பார்வை

அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ), தேசியக் கல்விக் கொள்கை 2020 செயல்பாட்டு வரையறை அமைத்த பிரேம்வீர் கமிட்டி, தொழிற்கல்வியைத் தாய்மொழியிலும் அளிக்கப் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி பிராந்திய மொழிகளில் தொழிற்கல்வியைக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் 2021-22ஆம் கல்வி ஆண்டில் தொடங்கத் தேவையான தகுதிகள் பற்றியும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு 2021 மார்ச் 3 அன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதன் பயனாக உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கை (Gross Enrollment Ratio) அதிகரிக்கும், நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழ்ந்து, ஆங்கிலம் கற்பதற்கான வாய்ப்பே இல்லாதவர்களுக்கு, குறிப்பாக பழங்குடியினருக்கு, தாய்மொழியில் படித்துப் பட்டம்பெறும் வாய்ப்புகள் கிடைக்கும்.

அதே தறுவாயில் பல்கலைக்கழகங்கள், ஆங்கில மொழிப் பாடங்களைக் கட்டாயமாக்கி, ஒவ்வொரு மாணவனும் ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக உருவாக வேண்டும் என்றும் அந்தச் சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு முன்மாதிரிகள்

ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் திறமையுடன், நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் தேர்ச்சியும் பட்டமும் வழங்கப்படுகிறது. இதன் பயனாக, மாணவர்கள் தங்களது வேலையைப் பெறுவதற்கு, மேல் படிப்பிற்கு - ஆராய்ச்சிகளுக்குப் பிற நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்வது எளிதாகிறது.

கல்வி நிறுவனங்கள் தாய்மொழியில் கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்க, நடப்பு அறிவியல் தொடர்பான உள்கட்டமைப்புகளை உருவாக்க, கல்வி மேம்பாட்டிற்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள 6 சதவீதத்தில், குறைந்தது 1 சதவீதம் அளிக்கப்பட வேண்டும்.

பிற மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் இருக்கின்ற மென்பொருள்களைத் தாய்மொழிகளில் உருவாக்க, தேர்ந்த நிபுணர்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் மென்பொருள்கள் கிடைக்கச் செய்யவேண்டும்.

அனைத்துப் பாடநூல்கள், குறிப்பாக பொறியியல், மருத்துவம், விவசாயம், பிற படிப்புகளுக்கான நூல்களைத் தாய்மொழியில் எழுதித் தயாரிக்க, கால எல்லை குறித்து, பல்லாயிரம் மொழி வல்லுநர்களை முழு நேர வேலைக்கு அமர்த்தித் தயார்செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகம், கல்லூரியிலும் மொழி மாற்றத்திற்கென்று தனியாகத் துறையை உருவாக்கி, ஆசிரியர்களை நிரந்தரமாக நியமித்து, முழு நேரப் பணியாக மொழிமாற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முழுவீச்சில் ஆதரவு…

பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தேசியத் தர மதிப்பீட்டு அமைப்புகள் (NAAC, NIRF, NBA), மாநில மொழிகளில் படைக்கப்படும் வெளியீடுகள், கட்டுரைகளை அங்கீகாரத்திற்கும், தரக் குறியீடுகளுக்கும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்துப் படிப்புகளின் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி அறிக்கையைத் தாய்மொழியிலும் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும், குறைந்தது 40 சதவீதப்படிப்புகள் தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையோ, மாநிலக் கல்விக் கொள்கையோ, கொள்கை அளவில் நின்றுவிடாமல் செயலாக்கம் பெற்றால்தான் தாய்மொழி வளரும், உலகளாவிய தரமான கல்வியையும் நாம் பெற முடியும்.

Total Pageviews

Search This Blog