கருத்தரங்கம்
August 03, 2022
உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு ஒரு நாள் கருத்தரங்கம்: ஆளுநர் மாளிகையில் நாளை நடக்கிறது
உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் ஆளுநர் மாளிகையில் நாளை நடக்கிறது. அதில், தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் சிறந்த இடங்களை பிடித்த தமிழ்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களை ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி கவுரவிக்கிறார். தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலின் அடிப்படையில், உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் கருத்தரங்கம் கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.
இதில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களை ஆளுநர் பாராட்டுகிறார். கருத்தரங்கில் தேசிய தரவரிசையில் சிறந்து விளங்குவதற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகள் மற்றும் உத்திகள் குறித்து பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் விளக்கம் அளிக்கின்றன. இதில் பங்கேற்க அமைச்சர்கள், அரசின் செயலாளர்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிற கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த தகவல் கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.