Breaking

Showing posts with label Insist on Field Study of Juvenile Correctional Schools. Show all posts
Showing posts with label Insist on Field Study of Juvenile Correctional Schools. Show all posts

Wednesday, January 18, 2023

January 18, 2023

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை களஆய்வு செய்ய வலியுறுத்தல் Insist on Field Study of Juvenile Correctional Schools

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை களஆய்வு செய்ய ஆணையம் வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

மாநிலம் முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளைக் களஆய்வு செய்திட ஆணையம் அமைத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சேர்ந்த கோகுல்ஸ்ரீ (17) என்பவரை ரயில்வே காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்து செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

கடந்த டிசம்பர் 31-ம் மாலை 5 மணியளவில் அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார் என்று அவரது தாய்க்கு தகவல் கூறியிருக்கிறார்கள். ஆனால், அவரது உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து அவரது தாய், சத்தம் போட்டதும் அவரை மிரட்டி வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதுகுறித்து செங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து கோகுல்ஸ்ரீயின் தாய் பிரியா விஷயத்தை சொல்லியுள்ளார். அவரும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இரண்டு மருத்துவ அறிக்கையிலும் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடூரமாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு நகர காவல்துறை இதை கொலைவழக்காக மாற்றி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் மோகன், துணை கண்காணிப்பாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சட்டம் ஒழுங்கு காவல்துறையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

அபலைப்பெண் பிரியாவை சட்டவிரோதமாக அடைத்து வைத்து வெள்ளைத் தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் உள்ள விதவைத்தாய் பிரியாவிற்கு தகுந்த பாதுகாப்பும், அவரின் தகுதிக்குற்ப வேலைவாய்ப்பும் நிவாரணமும் அரசு வழங்க வேண்டும், அத்துடன் வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கின்றேன்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog