Breaking

Showing posts with label Controversy question. Show all posts
Showing posts with label Controversy question. Show all posts

Monday, January 23, 2023

January 23, 2023

போட்டித் தேர்வு வடிவமைப்போர் பட்டியல் வெளியானதால் சர்ச்சை

போட்டித் தேர்வு வடிவமைப்போர் பட்டியல் வெளியானதால் சர்ச்சை Controversy due to publication of competitive exam designer list

கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியிட தேர்வுக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர்களின் விபரங்கள் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளுக்கு, போட்டி தேர்வு மூலம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ரகசியமானது

இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும் முயற்சியில் கல்லுாரிக் கல்வி இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது.

பாடத்திட்டம் வடிவமைப்பதற்காக, பாட வாரியாக துறை சார்ந்த நிபுணர்கள் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த சுற்றறிக்கை, கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தியிடம் இருந்து, தொடர்புடைய பேராசிரியர்களுக்கு, அந்தக் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது.

பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பேராசிரியர்களின் பெயர்கள், துறை வாரியாக, 14 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் ரகசியமானது; வெளியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சமூக வலைத்தளங்களில், சுற்றறிக்கையோடு சேர்த்து, பாடம், துறை நிபுணர்களின், பணி விபரம், பணிபுரியும் கல்லுாரி, தொடர்பு எண் ஆகியவையும் பரவலாக பகிரப்படுகிறது.

கேள்விக்குறி

பேராசிரியர்கள் கூறியதாவது:

ரகசியமாக வைக்க வேண்டிய பெயர்ப்பட்டியல் பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளது. எனில், பாடத்திட்டங்கள் குறித்த தகவல் எந்த அளவுக்கு ரகசியம் பேணப்படும் என்பது கேள்விக்குறி தான்.

இதைக்கூட கவனமாக கையாளாதவர்கள், தேர்வை எப்படி நடத்துவர். இந்தப் பொறுப்பை, டி.என்.பி.எஸ்.சி., வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இவ்வாறு கூறினர்.

Thursday, January 19, 2023

January 19, 2023

10ம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சை கேள்வி - அரசுக்கு புது நெருக்கடி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எது..? 10ம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சை கேள்வி - மம்தா அரசுக்கு புது நெருக்கடி

மேற்கு வங்காளத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியால் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வங்காள மொழியின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான 10ம் வகுப்பு மாதிரி தாளில் கேட்கப்பட்ட கேள்வி இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வழக்கமாக அந்த மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் மாதிரித் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், அதற்கான வினாத்தாள்கள் அடங்கிய தொகுப்பு புத்தகமாக தயாரிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் புத்தகத்தில் ஆசாத் காஷ்மீர் வரைபடத்தை காட்டவும் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதாவது, ஆசாத் காஷ்மீர் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பொருள்படும். 132வது பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து மேற்கு வங்காள அரசுக்கும், அந்த மாநில கல்வி வாரியத்திற்கும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, அந்த மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் திலீப்கோஷ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மம்தா தலைமையிலான அரசு ஆன்டி – இந்தியா மனப்பான்மையை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும், பல பா.ஜ.க. தலைவர்களும் இந்த விவகாரத்திற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காள பள்ளிக்கல்வி தலைவர் ராமானுஜ் கங்கோபத்யாய் அளித்துள்ள விளக்கத்தில்,  “எங்களது நிபுணர்கள் வினாத்தாளை ஆய்வு செய்வார்கள்.

யார் இந்த வினாத்தாளை உருவாக்கியது? இதற்கு ஒப்புதல் வழங்கியது யார்? என்று கண்டறியப்பட்டு சட்டவிதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்தும் சட்டவிதிப்படி நடக்கும்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சி எம்.பி.யான சாந்தனுசென் கூறியிப்பதாவது,  “பள்ளிக்கல்வி ஆணையம் தனது கடமையை செய்யும். ஆனால், பா.ஜ.க.விற்கு இதைப்பற்றி பேசுவதற்கு எந்தவொரு உரிமையும் இல்லை. தேசிய கல்விக்கொள்ளை 2022 மூலம் நாட்டின் கல்வி முறையை காவிமயமாக்கியுள்ளது தெளிவாக தெரிகிறது” என்று கூறியுள்ளார். இந்த கேள்வித்தாள் விவகாரம் தற்போது மேற்குவங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக நிகழ்ந்து வருகிறது. மேலும், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டமும் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதனால், காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நிகழ்ந்து வருகிறது.

மேலும், பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சிப்பதால் அவர்களுடனும் இந்திய ராணுவம் சண்டையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வரும் பா.ஜ.க. இந்த விவகாரத்தில் பெரியளவில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை விமர்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog