Breaking

Showing posts with label breakfast program. Show all posts
Showing posts with label breakfast program. Show all posts

Monday, March 16, 2026

Saturday, March 09, 2024

Friday, January 19, 2024

January 19, 2024

அரசு நிதியுதவி பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்? - அமைச்சர் அன்பில் மகேஸ்

Breakfast scheme for government funded schools too? - Minister Anbil Mahes அரசு நிதியுதவி பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்? - அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதல்வர் பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: ஆசிரியர் பணியிடங்களை அதிக எண்ணிக்கையில் நிரப்ப வேண்டும் என்பது அரசின் ஆசை.நிதி அமைச்சகத்திடம் காலிப் பணியிட விவரங்களைக் கொடுக்கிறோம். அவர்கள் நிதி சுமைக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்ப அனுமதிக்கின்றனர்.

காலை உணவுத் திட்டத்தை பொறுத்தவரையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முதல்வர் திட்டமிட்டு வருகிறார். அதற்கான சாதகமான அறிவிப்பு நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் வரும் 1 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தாலும் வரலாம். நாம் நம்முடைய பள்ளியை தன்னிறைவு பெற்ற பள்ளிகளாக வைத்திருக்க வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்கள் என்று பள்ளிக் கல்வித் துறையால் தெரிவிக்கப்பட்டாலும், எங்களை பொறுத்தவரையில் சிறந்த கல்வித் துறை அதிகாரிகளாகத்தான் அவர்களை பார்க்கிறோம். அதனை நிரூபிக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், தமிழ்நாடு நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தமிழ்மணி, தலைவர் கஜேந்திரன், தமிழ்நாடு அரசின் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Wednesday, January 10, 2024

January 10, 2024

அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை சிற்றுண்டி - ஆசிரியர்கள் அசத்தல்



அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை சிற்றுண்டி - ஆசிரியர்கள் அசத்தல் Breakfast at Govt High School - Teachers are awesome

தமிழகத்தில் குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில், செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பங்களிப்புடன் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவது பாராட்டை பெற்றுள்ளது. வெளியில் தெரியாமல் ஆசிரியர்கள் செய்து வரும் இந்த உதவி, சமீபத்தில் இந்த பள்ளிக்குச் சென்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. ஆசிரியர்களின் இச்செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

இதுகுறித்து செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:

இந்த பள்ளி 105 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டதாக இருந்தது. செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பின்னர், இந்த பள்ளி தமிழக அரசு பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். தனியார் பள்ளிகள் அதிகரித்தபோது மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. இருபாலர் பயின்ற இந்த பள்ளி ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. தற்போது 920 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 40 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்வியை மேம்படுத்த காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வந்து படிக்க மாணவர்களை அறிவுறுத்தினோம். பல மாணவர்களால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர முடியவில்லை. பள்ளியிலும் பல மாணவர்கள் சோர்வாக காணப்பட்டனர்.

ஆசிரியர்கள் ஆர்வம்:

இதுகுறித்து மாணவர்களிடம் கேட்ட போது, குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் காலையிலேயே வேலைக்கு சென்றுவிடுவதால், காலையில் சாப்பிடா மல் பள்ளிக்கு வருவதாக கூறினர். வீட்டில் காலை உணவு தாமதமாவதால் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் சிலர் கூறினர்.

இதனால் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினோம். அப்போது, அரசுதொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டிதிட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதால் மாணவர்கள் வருகை அதிகரித்திருக்கிறது. எனவே, நமது பள்ளியிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கலாம் எனவும், அதற்கான செலவை தாங்களே ஏற்பதாகவும் அனைத்து ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கூறினர். மாணவர்களுக்கு எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் இட்லி வழங்கலாம் என்றும், அதை நல்ல தரத்துடன் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.

இதையடுத்து, சாப்பிடாமல் வரும் மாணவர்களுக்காக கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு காலை சிற்றுண்டி வழங்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் 30 பேர் பயனடைந்து வந்தனர்.

படிப்படியாக இந்தஎண்ணிக்கை அதிகரித்து தற்போது தினமும்சராசரியாக 120 பேர் வரை சாப்பிடுகின்றனர். மாணவர்கள் தற்போது சோர்வின்றி படிப்பதால், கல்வித் திறன் அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

பாராட்டுக்குரியது:

இதுகுறித்து இப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “அரசு பள்ளிகளில் பெரும்பாலும் ஏழ்மையான மாணவர்களே பயின்று வருகின்றனர். அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதுபோல், மேல்நிலைப் பள்ளி வரையிலும் காலையில் சிற்றுண்டி வழங்கினால் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும்.

காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு தங்கள் சொந்த செலவில் சிற்றுண்டி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியது” என்றனர்.

Friday, December 01, 2023

December 01, 2023

காலை உணவுத் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை: மாநகராட்சி நிர்வாகம்



காலை உணவுத் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை: மாநகராட்சி நிர்வாகம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்படவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதல்கட்டமாக முன்னோடி திட்டமாக சென்னை மாநகராட்சியின் 37 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. பின்னர், சென்னை மாநகராட்சியின் 358 பள்ளிகளில் 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தை தனியாரிடம் வழங்கும் வகையில் உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் புதன்கிழமை பெறப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 21, 2023

October 21, 2023

6 முதல் 8ம் வகுப்பு வரை ‘காலை உணவு’ - தமிழகத்தில் தொடக்கம்!



6 முதல் 8ம் வகுப்பு வரை ‘காலை உணவு’ - தமிழகத்தில் முதல் முறையாக மதுரை பள்ளிகளில் தொடக்கம்

முதலமைச்சர் ஸ்டாலின் அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கி வைத்த காலை உணவு திட்டம் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழகத்திலே முதல் முறையாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களும் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு இந்த திட்டத்தில் காலை உணவு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் இந்த திட்டம் 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு காலை உணவுத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தில் 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள் என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு 1,14,095 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெற்று வருகிறார்கள். மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் முதலமைச்சரின் இந்த காலை உணவு திட்டம் தமிழகத்திலே முதல் முறையாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு, சத்தமில்லாமல் அந்த மாணவர்களும் மாநகராட்சி காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்த திட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளை தவிர்த்து மற்ற வகுப்புகள் (6 முதல் 8 வரை) படிக்கும் மாணவ, மாணவிகளும் பயனடையும் வகையில் கூடுதலாக இந்த திட்டத்தில் 1,350 பேருக்கு தனியார் சமூக பங்களிப்பின் மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மேயர் இந்திராணி கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு கள்ளழகர் உயர்நிலைப்பள்ளி உள்பட மொத்தம் 74 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 7,197 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மாநகராட்சி பள்ளிகளில் அடித்தட்டு மக்களுடைய குழந்தைகளே பெரும்பாலும் படிப்பதால் அவர்களில் 6 முதல் 8 படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களும் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள். இதை ஒரு முறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நான் போன்றோர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய சென்றபோது கண்டறிந்தோம். அப்போது 6ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் காலை உணவு சாப்பிட முடியாமல் பசியுடன் நின்று கொண்டிருந்தார். அழைத்து பேசியபோது அந்த மாணவர் வீட்டில் தினமும் காலை உணவு தயார் செய்வதில்லை என்றும், மதிய உணவை நம்பிதான் பள்ளிக்கு வருவதாக தெரிவித்தார். உடனே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதுபோன்ற மாணவர்களும் பயனடையும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்யும் படி எங்களை கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் பயனடையும் வகையில் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்தி உள்ளோம், ’’ என்றார்.

Wednesday, October 11, 2023

October 11, 2023

காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!



காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்! School Education Instruction to Monitor Breakfast and Lunch Maintenance!

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில், "பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்களை வாங்கி உண்ணக் கூடாது உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த நன்னெறிகளை, அவ்வப்போது இறைவணக்கக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும், புகையிலை மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும் அறிவுரைகள் வழங்க வேண்டும்.மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தொடர்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும். சுகாதாரமான பொருட்கள் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சமைக்கும் முன்னதாக தூய்மையான நீரில் கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.உணவு தயார் செய்யும் சமையல் கூடம் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். எரிபாெருட்கள், தேவையற்ற பொருட்கள் குப்பையாக வைத்திருக்கக் கூடாது. சமையலர், சமையல் உதவியாளர் தூய்மையான முறையில் சமையல் செய்வதை உறுதிபடுத்த வேண்டும். மாணவர்கள் உணவு அருந்தும் இடம் சுத்தமாக பராமரிக்கப்படுவதுடன், உணவு அருந்தும்போது பறவைகள், பிற விலங்கினங்கள் உணவுப் பொருட்கள், உணவு அருந்தும் இடத்திற்கு அருகில் அணுகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்படும்போது, முட்டை கெடாமல் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் வரிசையில் உணவைப் பெற்று அருந்துவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.கொதி நிலையில் உள்ள சாம்பார், உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அருகில் எக்காரணம் கொண்டும் மாணவர்கள் செல்லாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்காெள்ள வேண்டும். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களிடம் உணவு அருந்தும் முன்பாக கைகள், உணவு அருந்தும் தட்டு, டம்ளர் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த அறிவுரைகள் கூற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 28, 2023

September 28, 2023

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளில் அக்டோபர் 24-ந் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்



தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளில் அக்டோபர் 24-ந் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்ப டுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 24-ந் தேதி முதல் தெலுங்கானா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கூட்டம் தொடங்கப்படுகிறது.இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Thursday, August 31, 2023

August 31, 2023

காலை உணவு திட்டம் : நேரில் வந்து ஆய்வு செய்த தெலங்கானா மாநில அதிகாரிகள் குழு!!

காலை உணவு திட்டம் : நேரில் வந்து ஆய்வு செய்த தெலங்கானா மாநில அதிகாரிகள் குழு!!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை தெலங்கானா மாநில அதிகாரிகள் பார்வையிட்டனர். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை அறிய தெலங்கானா மாநில அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். தெலங்கானா முதல்வரின் தனிச்செயலாளர் ஸ்மிதா சபர்வால் தலைமையில் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட அதிகாரிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள ஜிசிசி பழைய பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். ராயபுரத்தில் ஊழல் மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவு பரிமாறப்படுவதை பார்வையிட்டனர். சமைக்கப்படும் இடம், உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் முறை பற்றி அதிகாரிகள் அறிந்து கொண்டனர். இதனிடையே தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தால் 18 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் காலை உணவுத் திட்டம்: தெலங்கானா அதிகாரிகள் ஆய்வு!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் குறித்து அறிந்துகொள்வதற்காக தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது.

சென்னை ராயபுரத்திலுள்ள அரசுப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து அறிந்துகொண்டனர்.



தெலங்கானா முதல்வரின் செயலாளர் சுனிதா, அரசு செயலாளர் கிறிஸ்டீனா, சிறப்புப் பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர், உள்ளிட்ட அதிகாரிகள் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தனர்.



சென்னை ராயபுரத்திலுள்ள உணவுக் கூடத்தில், காலை உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, என்னென்ன உணவுகள் தயாரிக்கப்படுகின்றன, எவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது என்பதை கேட்டறிந்தனர்.



தமிழகத்தின் காலை உணவுத் திட்ட சிறப்பு அதிகாரியான இளம்பகவத், காலை உணவுத் திட்டம் குறித்து தெலங்கானா அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.



அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை நேரில் பார்வையிட உள்ளனர்.

Saturday, August 26, 2023

August 26, 2023

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சேவூரில் நடந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 576 பள்ளிகளில் 32,304 மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கியது. காட்பாடி அடுத்த சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்குகிறது. இந்த திட்டத்தை மாவட்டத்தில் தொடங்கி வைப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர் ஆகியோர் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தனர். இதன்மூலம் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கியுள்ளார். காலையில் சிறப்பான உணவை மாணவர்களுக்கு கொடுத்தால் நல்ல ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் கல்வி கற்பார்கள் என்ற நோக்கில் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.

கடந்த ஆண்டு முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த பள்ளிகளில் ஆய்வு செய்தபோது மாணவ- மாணவிகளின் வருகைப்பதிவு அதிகமாக உள்ளது. அரசு சார்பில் பள்ளிகளில் காலை மற்றும் மதியம் என இருவேளையும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் இரவு உணவு வழங்கவும் அரசு தயாராக உள்ளது. ஆனால் தனது பிள்ளைக்கு தன் கையால் சோறு ஊட்டவே எந்த தாயும் நினைப்பார். எனவே, இரவு ஒருவேளை உணவை அவர்களே கொடுக்கும் வகையில் விட்டுக்கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், திட்ட இயக்குனர் ஆர்த்தி, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணை மேயர் சுனில்குமார், ஆர்டிஓ கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.இதேபோல், பள்ளிகொண்டா மற்றும் பொய்கை பகுதியில் நடந்த தொடக்க விழாவில் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், ஒடுகத்தூர் அரசு பள்ளியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு பகுதியில் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இதேபோல் வேலூர் கொசப்பேட்டை ஈ.வே.ரா.நாகம்மையார் அரசு பள்ளியில் இந்த திட்டத்தை எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பள்ளி சார்பில் எம்எல்ஏவிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், பள்ளிக்கென தூய்மை காவலர்கள் நியமிக்க வேண்டும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். காலை, மாலையில் வெளியாட்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால் மாணவிகள் அச்சப்படுகின்றனர். எனவே போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும்' என தெரிவித்திருந்தனர்.

இதேபோல், கே.வி.குப்பம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் காலை உணவு வழங்கும் திட்டத்தை ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பள்ளிகொண்டா பேரூராட்சி அரசு பள்ளியில் பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன், ஒடுகத்தூர் பேரூராட்சி அரசு பள்ளியில் பேரூராட்சி தலைவர் சத்தியாவதி பாஸ்கரன், சேர்பாடி அரசு பள்ளியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, பென்னாத்தூர் பேரூராட்சி அரசு பள்ளியில் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், பொன்னை அடுத்த மேல்பாடி அரசு பள்ளியில் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், பேரணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி அரசு பள்ளியில் ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஆகியோர் முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். பகுதி வாரியாக காலை உணவு வழங்கப்படும் விவரம்

அணைக்கட்டு ஒன்றியத்தில் 112 பள்ளிகளில் 6,898 மாணவர்களுக்கும், குடியாத்தம் ஒன்றியத்தில் 124 பள்ளிகளில் 6,205 மாணவர்களுக்கும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 88 பள்ளிகளில் 4,135 மாணவர்களுக்கும், கணியம்பாடி ஒன்றியத்தில் 43 பள்ளிகளில் 1,985 மாணவர்களுக்கும், காட்பாடி ஒன்றியத்தில் 83 பள்ளிகளில் 3,551 மாணவர்களுக்கும், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 47 பள்ளிகளில் 3,533 மாணவர்களுக்கும், வேலூர் ஒன்றியத்தில் 31 பள்ளிகளில் 2,825 மாணவர்களுக்கும், வேலூர் மாநகராட்சியில் 3 பள்ளிகளில் 324 மாணவர்களுக்கும், குடியாத்தம் நகராட்சியில் 17 பள்ளிகளில் 857 மாணவர்களுக்கும், பேரணாம்பட்டு நகராட்சியில் 4 பள்ளிகளில் 524 மாணவர்களுக்கும், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 6 பள்ளிகளில் 247 மாணவர்களுக்கும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 10 பள்ளிகளில் 688 மாணவர்களுக்கும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 6 பள்ளிகளில் 355 மாணவர்களுக்கும், திருவலம் பேரூராட்சியில் 2 பள்ளிகளில் 177 மாணவர்களுக்கும் என மொத்தம் 576 பள்ளிகளில் பயிலும் 32,304 மாணவர்களுக்கு நேற்று காலை உணவு பரிமாறப்பட்டது.

Friday, August 25, 2023

August 25, 2023

தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை, திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி அறிவித்தார். முதலில் இத்திட்டம், சென்னை மாநகராட்சி பள்ளிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தொடங்கப்படும் என்றும். பின்னர், படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார். அந்த வகையில் முதல் கட்டமாக, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில், மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த மார்ச் 1-ம் தேதி இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 பேர், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 பேர், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 பேர், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 பேர் என மொத்தம் 1,545 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்துக்கு தற்போது ரூ.33.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த சமூகநலம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 16 லட்சம் மாணவர்கள் பயன்: இந்நிலையில், ‘‘மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் இன்று காலை தொடங்கி வைத்து, பள்ளிக் குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டார். அப்போது மாணவர்களுடன் முதல்வர் உரையாடினார்.

கட்சி பேதமின்றி, அனைத்து கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைக்குமாறு முதல்வர் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
August 25, 2023

காலை உணவு திட்டத்துக்கு முன்னோடியாக சிறந்து விளங்கிய வெள்ளகோவில் அரசுப் பள்ளி!



காலை உணவு திட்டத்துக்கு முன்னோடியாக சிறந்து விளங்கிய வெள்ளகோவில் அரசுப் பள்ளி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு ஓராண்டு நிறைவையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், மிக முக்கியமானது அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம். முதல்கட்டமாக 1,545 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இன்று (ஆக.25) 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுக்கு முன்னோடியாக திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே சிலம்பக் கவுண்டன் வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2021 ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு நேற்று வரை தொடர்ந்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக தன்னார்வலர்கள் கூறும்போது, ‘‘குழந்தைகள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்தமர்ந்து, பாடங்களை கவனிக்க முடியாமல் இருப்பதை கண்கூடாக பார்த்தோம். பாடம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் போதிய விருப்பமின்றி இருப்பதைக் கண்டறிந்து, அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க வேண்டுமென விரும்பி, கடந்த 2021-ம் ஆண்டு காலை உணவுத் திட்டத்தை தொடங்கினோம்.

திட்டத்தின் நிறைவு நாளான நேற்று வழங்கப்பட்ட காலை உணவு

இது பெற்றோர் மத்தியிலும், சக அரசுப் பள்ளிகளின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பள்ளி குழந்தைகளுக்கு இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, காளான் கிரேவி, குருமா உள்ளிட்டவை சுழற்சி அடிப்படையில் வழங்கப்பட்டது. இப்பள்ளியில் படித்து, உயர் கல்விக்காக ஓலப்பாளையம் உயர்நிலைப் பள்ளிக்கு சென்று வரும் ஏழை குழந்தைகளும், இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு சென்று பயன்பெற்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கோ.பிரபாகர் கூறும்போது, “கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் சேர்ந்தபோது, மாணவர்களின் எண்ணிக்கை 6-ஆக இருந்தது. தொடர்ந்து 20 பேருக்குள் மட்டுமே இருந்தது. இந்நிலையில், எங்கள் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்துக்காக வழங்கப்படும் சிலிண்டர் கிடைக்கவில்லை. பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பசியின்றி இயங்க வேண்டும் என்ற வேட்கையோடு, மிகவும் சிரமப்பட்டு ஊரில் உள்ளதன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சமையல் பாத்திரங்கள் வாங்கப்பட்டன. தன்னார்வலர்கள் மற்றும் ஊர் மக்களின் முழு ஒத்துழைப்பும் தான் காலை உணவுத் திட்டம் வெற்றி பெற முக்கியக் காரணம். இத்திட்டத்துக்காக யாரிடமும் பணம் பெறவில்லை. ஒரு மாதத்துக்கான வேலை நாட்களின் எண்ணிக்கைக்கேற்ப, தன்னார்வலர்களிடம் சமையல் பொருட்களை பெற்றோம்.

கரோனாவுக்கு பின்னர், பள்ளிகள் மறு திறப்புக்கு பிறகு கடந்த நவம்பர் 11-ம் தேதி தொடங்கி, நேற்று வரை தொடர்ந்து காலை உணவை அனைத்து வேலை நாட்களிலும் வழங்கினோம். 32 மாணவர்கள் சாப்பிட்டு வந்தனர். ஒருவரும் சாப்பிட வழியின்றி பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காக தொடர்ந்து தொய்வின்றி நடத்தினோம்.

பள்ளி மேலாண்மைக் குழுவும், பெற்றோரும் ஒத்துழைப்பு அளித்ததால், காலை உணவுத் திட்டம் சிறப்பாக நடைபெற்றது. இரண்டே கால் ஆண்டுகளாக நடந்து வந்த திட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இன்று (ஆக.25) இத்திட்டத்தை அரசு தொடங்குவது எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

இத்தனை நாட்கள் காலையில் குழந்தைகளின் பசியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். தமிழ்நாடு அரசு அறிவிக்கும் முன்பே, எங்கள் திட்டத்தை பல்வேறு தரப்பினர் கேட்டுச்சென்று அமல்படுத்த முயன்றனர். தன்னார்வலர்களின் தயவால் பள்ளி வேலை நாட்களில் ஒரு நாள் கூட தொய்வின்றி, காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்தி பசியாற்றியது எங்களுக்கு பெருமைதான்” என்றார்.

Tuesday, August 22, 2023

August 22, 2023

ஆக.25 முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் - நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்! - Press Release



ஆக.25 முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்- நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

வரும் 25-ம் தேதி முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது. நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் – இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து, இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்” – என்று பாடினார் மகாகவி பாரதியார். மகாகவியின் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது. சிறப்பு வாய்ந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநில மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தக் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கவிருக்கிறார்.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தினை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு கேட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (22-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த 27-7-2022 அன்று வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயனடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.75 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டில் விரிவுபடுத்தி கடந்த 7-6-2023 அன்று ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தச் சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட இருக்கும் இத்திட்டத்தினை வரும் 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில், தான் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தச் சீர்மிகு திட்டத்தினைத் தொடங்கி வைத்து சிறப்பித்திட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, May 27, 2023

Total Pageviews

Search This Blog