மாவட்ட செஸ் போட்டி
July 18, 2022
மாவட்ட செஸ் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்று அசத்தல்
மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் மாணவ, மாணவியர் பங்கேற்று அசத்தினர். மாமல்லபுரத்தில் உலக செஸ் போட்டி நடைபெற உள்ளதையொட்டி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் செஸ் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், செங்கல்பட்டு செஸ் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் நேற்று காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி தலைவர் லோகராஜ் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு செஸ் சங்கத்தின் நிர்வாகிகள் ஸ்ரீமதி, புவனாசாய், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரா செஸ் சங்கத்தின் செயலாளர் கோபால் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 250 பேர் கலந்துகொண்டு செஸ் விளையாடினர்.இதில், 9, 12, 16 வயது வாரியாக 7 சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று மாலை பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர் மங்கையர்க்கரசி அனைவரையும் வரவேற்றார். இதில், காவல் துறை உதவி ஆய்வாளர் அன்பழகன் கலந்து கொண்டு செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.