Breaking

Showing posts with label new education policy. Show all posts
Showing posts with label new education policy. Show all posts

Wednesday, September 21, 2022

September 21, 2022

மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும் தமிழக கல்விக் கொள்கை குழு தலைவர் தகவல்

மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும் தமிழக கல்விக் கொள்கை குழு தலைவர் தகவல் - Tamil Nadu Education Policy Committee Chairman informs that good education policies of Central Government will be adopted

''மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும்,'' என, திருநெல்வேலியில் நடந்த தென் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மாநில கல்விக் கொள்கை உயர் மட்டக்குழு தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார். தமிழக கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை அமல்படுத்துவதற்காக நீதிபதி டி.முருகேசன் தலைமையில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் ஜூனில் அறிவித்தார். குழுவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 12 பேர் உள்ளனர்.

தென்மண்டல அளவில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் சவிதா, பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வு பெற்ற பேராசிரியர் ராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், யூனிசெப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்தினம், கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் பங்கேற்றனர்.

திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.முடிவில் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது: இதே போல ஏழு மண்டல கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். கல்வியின் தரம் எல்லா மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற பேசியவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

கூட்டங்கள் முடிந்ததும் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.பள்ளி மாணவர்களின் ஏற்றத் தாழ்வு, நிதி ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்கப்படும். கூட்டத்திற்கு மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனர். வரும் கூட்டங்களில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்வோம். கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் கருத்துக்களையும் கேட்போம். தேவைப்பட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கருத்து கேட்கப்படும்.

அதிக படிப்பு சுமையால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.மாநில கல்விக் கொள்கையில் தமிழக கலாசாரம், சமூகம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படும். மத்திய கல்விக் கொள்கையில் நல்ல கொள்கைகள் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வி பயிற்சியளிக்கப்படும்.

ஆசிரியர்களின் சம்பளம், வேலை தொடர்பான வழக்குகளில் இந்த குழு தலையிடாது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தரம் உயர்ந்துள்ளது. தரத்தை உயர்த்த இக்குழு பரிந்துரைக்கும்.

கல்வி கொள்கை குறித்த ஆலோசனைகளை stateeducation policy@gmail.com என மின்னஞ்சல் முகவரியிலும், 3வது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கும் அக்.,15க்குள் அனுப்பலாம் என்றார்.

ஆறு உறுப்பினர்கள் ஆப்சென்ட்

கல்விக் கொள்கை உயர் மட்ட குழுவில் உறுப்பினர்களான எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராமானுஜம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் ச.மாடசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.

Tuesday, August 23, 2022

August 23, 2022

மாநில கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்

மாநில கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கருத்துகளை தெரிவிப்பதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் மின்னஞ்சல் முகவரிக்கும், ‘மாநில கல்வி கொள்கை உயா் நிலைக் குழு,3-ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025’ என்ற முகவரிக்கும் செப். 15 வரை கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கைக் குழு மேலும் கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்து அக். 15 ஆம் தேதி வரை கருத்துகள், ஆலோசனைகளை பெற முடிவு செய்து கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், கருத்துகள், ஆலோசனைகளை பெறும் பொருட்டு மண்டல அளவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செப். 20-ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திலும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களுக்கு செப். 21- ஆம் தேதி மதுரை ஆட்சியா் அலுவலகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதேபோல, இதர மண்டலங்களிலும் படிப்படியாக கருத்து கேட்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 03, 2022

March 03, 2022

புதிய கல்வி கொள்கைப்படி பள்ளிப் பொது தேர்வில் மாற்றம்

புதிய கல்வி கொள்கைப்படி பள்ளிப் பொது தேர்வில் மாற்றம்

புதிய கல்வி கொள்கைப்படி திறன் வளர்ப்புக்கான கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள் பள்ளி பொதுத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

இதையும் படிக்க | தேசிய சட்டப்பல்கலை மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு பிரிவில் 69 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

இதற்காக மத்திய அரசு சார்பில் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கூடுத லாக திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடத்துக்கான தேர்வு தேதிகள் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல் மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு இதுவரை தொழிற்கல்வி பாடமும் அதற்கான தேர்வும் கிடையாது. பிற மாநிலத்தவருக்கான விருப்ப மொழி பாடம் மட்டுமே கூடுதலாக இடம்பெறும். இந்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப மொழி பாடம் மட்டுமின்றி கூடுதலாக தொழிற்கல்வி பாடத்துக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10ம் வகுப்புக்கு மே 21; பிளஸ் 2க்கு மே 28ம் தேதி திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

புதிய கல்வி கொள்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடங்கள் மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு பிளஸ் 2 வகுப்புகளில் இந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டுள்ளன.

'தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம்' என அரசு அறிவித்தாலும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் அதன் அம்சங்கள் படிப்படியாக அமலுக்கு வர துவங்கி உள்ளன.

Total Pageviews

Search This Blog