Breaking

Showing posts with label Article. Show all posts
Showing posts with label Article. Show all posts

Monday, July 08, 2024

Monday, April 01, 2024

Monday, February 19, 2024

February 19, 2024

நனவாகின்றனவா பள்ளி மாணவிகளின் கனவுகள்? Do the dreams of schoolgirls come true?



நனவாகின்றனவா பள்ளி மாணவிகளின் கனவுகள்? Do the dreams of schoolgirls come true?

மருத்துவராக, பொறியாளராக வலம்வர வேண்டும் எனப் பல மாணவிகள் பள்ளி நாள்களில் கனவு கண்டாலும், நடைமுறையில் அது சாத்தியம் இல்லாமல் போகிறது என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆண்டுக் கல்வி நிலை அறிக்கை (ASER 2023).

கடந்த காலத்தில் பெண்களுக்குக் கல்வி எட்டாக்கனியாக இருந்தது. சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் காரணமாக மெல்ல மெல்லப் பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஆரம்பக் கல்வி வரை கற்பதற்கு மட்டுமே பெரும்பாலான பெண்கள் பள்ளிக்கு வருவார்கள். இன்று அதுவும் மாறிவருகிறது. எனினும் இன்றும் தமது உயர் கல்வி, வேலைக் கனவுகளை நனவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் நிலையே தொடர்கிறது. இடைநிற்றல் நிலவரம்: இந்தியா முழுவதிலும் இருந்து 26 மாநிலங்களைச் சேர்ந்த 28 மாவட்டங்களில் 14 முதல் 18 வயது கொண்ட 34,745 பள்ளி மாணவ-மாணவியரிடம் நடத்தப்பட்ட மாதிரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஆண்டுக் கல்வி நிலை அறிக்கை ஜனவரி 2024இல் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின்படி, 14 முதல் 18 வயதுடைய மாணவ-மாணவியர்களில் 86.8% பேர் பள்ளிகளில் கல்வியைத் தொடர்கின்றனர். 14 வயது உள்ளவர்களில் 3.9% பேர் மட்டுமே பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளனர். 18 வயதுடையவர்களில் பள்ளிப் படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை 32.6%ஆக உயர்கிறது. அதாவது, ஆணும் பெண்ணும் குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுவருகிறது.

முன்னர் பரவலாக இருந்த பெண்களின் கல்வி இடைநிற்றல், காலப்போக்கில் குறைந்துவருகிறது. 2017இல் 14 முதல் 18 வயது கொண்ட ஆண் / பெண்களில் 14.4% பேர் கல்வி நிலையங்களில் சேரவில்லை. வீட்டு வேலை, வருமானம் தரும் வேலை, குடும்ப வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுவந்தனர்.

ஆனால், இந்த நிலை மாறி தற்போது வெறும் 13.2% மட்டுமே கல்வி நிலையங்களுக்கு வெளியே உள்ளனர். 2017இல் 14 முதல் 18 வயது கொண்ட இளம் பெண்களில் 16% பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டனர். ஆண்களில் இது வெறும் 11.9%ஆக இருந்தது. அதாவது, பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவ - மாணவிகளிடையே 4.1% இடைவெளி இருந்தது.

ஆனால், 2023இல் இந்த இடைவெளி வெறும் 0.2% மட்டுமே. அதாவது, பெண்களும் ஆண்களைப் போலத் தொடர்ந்து கல்வி கற்கிறார்கள். இடைநிறுத்தத்தில் ஆண்-பெண் பேதம் குறைந்துவருகிறது. ‘பள்ளிக் கல்விக்குப் பின் என்ன கல்வி / தொழில் கற்க விரும்புகிறீர்கள்?’ என்கிற கேள்விக்கு, எதுவும் யோசிக்கவில்லை என 21.0% பேர் (ஆண்கள் 19.9% - பெண்கள் 22.0%) கூறுகின்றனர். அதாவது, ஐந்தில் ஒருவருக்கு அடுத்து என்ன செய்வது என்பது குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை.

கல்வி கற்ற பின்னர் என்ன பணியைத் தெரிவுசெய்வது என்பதில் ஆண்களின் தெரிவுகளாக ராணுவமும் (13.8%), காவல் துறையும் (13.6%) முதன்மையாக இருக்கின்றன. பெண்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் பணி (16%), மருத்துவர் (14.8%) ஆகியவை முதல் இரண்டு தெரிவாக இருந்தாலும், வியப்பளிக்கும் வகையில் காவல் துறையும் (12.5%) மூன்றாவது இடத்தில் உள்ளது.

உடலை வருத்திச் செய்யும் வேலைகளுக்குச் சமூக மதிப்பு இல்லை என்பதாலேயே இந்தத் துறைகளை அவர்கள் தெரிவுசெய்கிறார்கள். கல்வி மூலம் தமது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்வேகம்தான் இந்தத் தெரிவுகளை நோக்கி அவர்களைச் செலுத்துகிறது என்கிறது இந்த ஆய்வு.

விருப்பமும் நிதர்சனமும்: மாணவிகளில் 18.2% பேரும் மாணவர்களில் 16.7% பேரும் பொறியாளர் அல்லது மருத்துவராக விருப்பம் கொண்டிருந்தாலும் பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பிரிவைத் தெரிவு செய்கிறார்கள்? மாணவர்களில் 36.3% STEM எனப்படும் அறிவியல்- தொழில்நுட்பம்-பொறியியல்-கணிதம், மருத்துவம் சார் பிரிவில் சேர்கிறார்கள்.

ஆனால், மாணவிகளில் இது வெறும் 28% மட்டுமே. பொதுவாகவே, தென்னிந்தியாவில் STEM துறை கல்வியில் சேர்க்கை மிக அதிகம் - சுமார் 60%. ஆனால், உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் 30%க்கும் குறைவு. ஏனைய மாணவ- மாணவிகள் கலை-சமூக அறிவியல் பிரிவுகளில் சேர்கிறார்கள். “தமது எதிர்காலப் பணி குறித்து மாணவிகள் வெளிப்படுத்தும் ஆர்வம், லட்சிய உலகில் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதையே பெரும்பாலும் பிரதிபலிப்பதாக இருக்கிறது” என்கிறார் ஆய்வாளர் சுமன் பட்டாசார்ஜியா. நடைமுறை வாழ்க்கையில் வீட்டு வேலைச் சுமை, குடும்ப எல்லை, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் சமூக எதிர்பார்ப்பு முதலியவை அவர்களது சுதந்திரத்திலும் உயர் கல்வியிலும் பெருமளவு தாக்கம் செலுத்துகின்றன என்கிறார் சுமன்.

அதாவது, மாணவிகளின் கனவு நனவாகும் சமூக-குடும்பச் சூழல் இன்னமும் உருவாகவில்லை. மேலும், உயர் கல்வி வணிகமயமான சூழலில் கல்விக் கட்டணம் செலுத்திப் பெண்களைப் படிக்கவைக்கப் பல பெற்றோருக்குப் பொருளாதாரம் தடையாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவிகளிடையே சிறகடித்துப் பறக்க வேண்டும் என்ற அவா இருந்தாலும் சமூக-குடும்பச் சூழல் சிறகுகளைக் கயிறுகளால் கட்டிப்போட்டுவிடுகிறது. மேலும், வாழ்க்கைத் திறன்களைக் கற்க வாய்ப்பு இல்லை என்பதால், அந்தச் சிறகுகள் வலிமை குன்றியவையாக இருக்கின்றன. எனவே, ‘ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காண்!’ என்பது பெருமளவு மாணவிகளின் வாழ்வில் நடைமுறைச் சாத்தியமற்றதாகவே உள்ளது.

எடுத்துக்காட்டாக, 18 வயதுள்ள மாணவன், தான் குடியிருக்கும் ஊரில் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான திறன் பெற்றிருப்பதுபோலப் பெரும்பாலும் மாணவிகளுக்கு வாய்ப்பதில்லை. அதேபோலத் திறன்பேசி பயன்படுத்த வாய்ப்பு இருந்தாலும் 17-18 வயது மாணவர்களிடையே 77.1% பேருக்கு ‘கூகிள் மேப்’ பயன்படுத்தும் திறன் உள்ளது என்கிறது இந்த அறிக்கை. மாணவிகளிடம் இது வெறும் 34% மட்டுமே. அதாவது, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சொந்தக் காலில் நிற்கும் திறன் மாணவர்களுடன் ஒப்பிடும்போது மாணவிகளிடையே மிகக் குறைவு. சிறகுகள் வலிமை பெறட்டும்: கல்விக்குப் பிறகு எந்தப் பணி - தொழிலில் ஈடுபடுவது என்பதைச் சமூக அந்தஸ்து, பொருளாதாரச் சூழல், வேலைவாய்ப்புச் சூழல் எனப் பல்வேறு அம்சங்கள் தீர்மானிக்கின்றன. எனினும் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் பள்ளிகள் கணிசமான பங்கை வகிக்க முடியும்.

தென்னிந்தியாவில் சற்றே வித்தியாசமான சூழல் நிலவினாலும், பெருமளவு மாணவிகளுக்குப் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியை மட்டுமே முன்மாதிரி. அரிதாகப் பெண் மருத்துவர், பெண் அதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மாணவ-மாணவியர்களின் எதிர்காலத் திட்டமிடல் குறித்துப் பெரும்பாலான பள்ளிகளில் எந்தவித உள்ளீடும் தரப்படுவதில்லை. பல்வேறு பணி வாய்ப்புகள் குறித்து அறிமுகம் செய்தல், பல்வேறு தொழில் செய்பவர்களை வருவித்து மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடச் செய்தல் என்பன போன்ற எளிய முயற்சிகள்கூடப் பள்ளிகளில் முன்னெடுக்கப்படுவதில்லை.

குறிப்பாக, மாணவிகளுக்குப் பல்வேறு வாழ்க்கைத் திறன்களை வளர்க்க வாய்ப்புகளை ஏற்படுத்துவது அவசியம். சிறகுகள் வலிமைப்படுத்தப்பட வேண்டும். பள்ளிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதி இது. - தொடர்புக்கு: tvv123@gmail.com

Saturday, January 27, 2024

January 27, 2024

பள்ளி வளாகத்தில் ஒற்றுமை: அனைவரும் கைகோக்க வேண்டிய தருணம்!

பள்ளி வளாகத்தில் ஒற்றுமை: அனைவரும் கைகோக்க வேண்டிய தருணம்!

பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு

நாட்டின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கை வெளிச்சமாகத் திகழ்பவை அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள்தான். வணிகச் சந்தையின் தாக்கம் கல்வித் துறையில் ஊடுருவி இருந்தாலும், சந்தை எதிர்பார்க்கும் நுகர்வோராக மக்கள் முழுமையாக மாறிவிடவில்லை. தன்மானம் கொண்ட, கண்ணியம் மிக்கவர்களாகவே வாழ விரும்புகிறார்கள். அதேபோல், வன்முறை இல்லாத வகுப்பறை, பாதுகாப்பான பள்ளி வளாகம் என்பதே அனைவரின் விருப்பம். அதேவேளையில், மாணவர்களில் சிலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்; கையில் சாதிக்கயிறு கட்டிப் பள்ளிக்கு வருகிறார்கள்; தங்கள் விருப்பப்படி தலைமுடியை அமைத்துக்கொள்கிறார்கள் எனத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மறுபுறம் அலுவலர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் உள்ளிட்டவர்கள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாணவர்களின் புறத்தோற்றத்தில் வெளிப்படும் ஒழுக்கமின்மையைச் சரிசெய்ய முற்படுகின்றனர். போதைப் பழக்கத்துக்கு ஆளான மாணவர்களைக் காவலர்கள் பள்ளிக்கு வந்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல தலைமையாசிரியர்களே அனுமதி அளிப்பது, கையில் சாதிக் கயிறு கட்டியிருந்தால் அகற்றுவது, தலைமுடியை வெட்டிவிடுவது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும் சமூகத்தின் மீது கோபத்தையும் உருவாக்குகின்றன. வன்முறைமிக்க இவ்வாறான நடவடிக்கைகள் தங்களைச் சிறுமைப்படுத்தவே மேற்கொள்ளப்படுவதாக மாணவர்கள் கருதுகின்றனர். தவறான முன்னுதாரணங்கள்: அதிகாரம் படைத்தவர்கள், ஒருவரை அடக்கிவைத்து (physical confinement by use of position one holds in service), கட்டாயப்படுத்தி ஒரு செயலைச் செய்ய வைப்பது எந்த வகையான உளவியல் தாக்கத்தைக் குழந்தைப் பருவ மாணவர்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தவறுவது வேதனைக்குரியது. அத்தகைய ஆசிரியர் / தலைமை ஆசிரியர் கொண்டாடப்படுவது அதைவிட அதிகம் கவலை தருகிறது.‌ இதற்குப் பதிலாக, பாடநூல்களில் உடல் ஆரோக்கியம் குறித்த பாடங்களை இடம்பெறச் செய்வது, வகுப்பறைக் கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டில் இடம்பெறச் செய்வது போன்றவற்றின் மூலம் போதைப் பொருள்களின் ஆபத்தை மாணவர்கள் உணரவைக்க முடியும். காவல் துறையின் சிறப்புக் கண்காணிப்பின் மூலம் போதைப் பொருள்கள் பள்ளி வளாகத்தையோ மாணவர்களையோ நெருங்கவிடாமல் தடுக்கலாம். இவை இரண்டையும் திறன்மிக்க வகையில் செய்ய இயலாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களைத் தண்டித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர மறுக்கிறோம்.‌ சாதி செய்யும் சதி: கந்துவட்டி வியாபாரம் செய்பவர்கள், ஆற்று மணல், தாதுப் பொருள்கள் போன்றவற்றைச் சட்டத்துக்குப் புறம்பாக விற்பவர்கள், போதைப் பொருள் வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு அரணாகச் சாதி பயன்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்குத் தேவையான அடியாள்களை உருவாக்கும் களமாகப் பள்ளி வளாகங்களைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைப் பருவ மாணவர்களைத் தீரமிக்கவர்களாகச் சித்தரித்து, வன்முறையைக் கையாளப் பழக்கப்படுத்த ‘நாயகர்’ (hero) என்கிற பிம்பத்தைக் கட்டமைக்க நடக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியே சிகை அலங்காரம், கையில் கயிறு எனத் தொடங்கி, ஊர் திருவிழாக்களின் பதாகையில் அவர்கள் ஒளிப்படம் என்ற‌ அளவுக்கு விரிகிறது. மாணவர்கள் தங்களை ஒரு சாதியுடன் அடையாளப்படுத்திக்கொண்டு, மற்ற மாணவர்களை வேறு சாதியினராகக் கருதுமாறும், மோதல்களில் ஈடுபடுமாறும் தூண்டிவிடப்படுகின்றனர். வழக்கு, விசாரணை என்று வந்துவிட்டால், சாதிப் பாதுகாவலர் என்ற போர்வையில் பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி - குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட மாணவர் களின் காவலர்களாக மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள் சித்தரித்துக்கொள்கின்றனர். விவரம் அறியாத வயதில் இருக்கும் மாணவர்கள் இதில் சிக்கிச் சீரழிகின்றனர். அறிவியல்பூர்வமாகப் பல்நோக்கில் ஆய்வு மேற்கொண்டால் போதைப் பொருள் நடமாட்டத்துக்கும், சாதிய வன்மத்துடன் நடந்துகொள்வதற்கும் நெருங்கியதொடர்பு உள்ளதை‌ உணரலாம். இந்தச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றால், முதலில் இதன் ஆரம்பப் புள்ளியைக் கண்டறிய வேண்டும். கண்ணுக்குத் தெரியாமல் மனதில் ஆழப்பதிந்திருக்கும் சாதிய வன்மத்தை அகற்றுவதற்கு அறிவியல்பூர்வமான செயல்திட்டம் வேண்டும். சாதிப் பாகுபாடு: சமூகத்தில் பாகுபாட்டை உருவாக்கும் சாதி, தற்போது பள்ளி வளாகங்களில் மாணவர்களிடம் பாகுபாட்டை உருவாக்கத் தொடங்கிவிட்டது. ஒரு சாதியில் பிறந்த ஒரு மாணவர், வேறொரு சாதியில் பிறந்த மாணவருடன் நட்பு பாராட்டக் கூடாது, அவரை உடன்பிறப்பாகக் கருதக் கூடாது என்றெல்லாம் விஷ விதை தூவப்படுகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 17இன்படி‌ தண்டனைக்குரிய குற்றமாகும். சாதிப் பாகுபாடு என்னும் இழுக்கை அகற்றவேண்டிய பொறுப்பு அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு இருக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூடிப் பேசினால் மட்டுமே இச்சிக்கலுக்கான தீர்வைக் கண்டறிய முடியும்.‌ அவ்வாறு மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கூடிப் பேசிச் சிக்கலைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கி அரசிடம் தர முற்பட்டால், சாதிய வன்மத்துடன் நடந்துகொள்பவர்கள் பதற்றம் அடைகின்றனர். மக்களைச் சாதியாக அணிதிரட்டி தங்கள் பிடியில் வைத்திருப்பதன் மூலம் உருவாக்கிக்கொண்ட செல்வாக்கு தகர்ந்துவிடுமோ என்று அஞ்சத் தொடங்குகின்றனர்.‌ சட்டம் தங்களை நெருங்க முடியாத அளவுக்குத் தங்களைச் சுற்றி ஓர் அரணாகச் சாதி என்ற கருத்தியல் உள்ளது என்று நினைத்து சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுபவர்கள், சாதி என்னும் கருத்து தகர்ந்துவிட்டால் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பயப்படுகிறார்கள். அரசு செய்ய வேண்டியவை: மாணவர்களின் உயர் கல்வி, உயர் வேலைவாய்ப்பு, கண்ணியமிக்க வாழ்க்கை ஆகியவை குறித்துச் சிறிதும் கவலைப்படாத தீயசக்திகள், சாதி ஒழிப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்கிட முயலும் ஆசிரியர்கள் மேல் தங்களது கோபத்தைக் காட்ட முற்படுவதை உணர முடிகிறது. சாதி ஒழிப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்கிட முயலும் ஆசிரியர்கள் மீது சில ஆசிரியர்களே வன்மம் காட்டுவதையும் காண முடிகிறது. இத்தகைய போக்கைக் கவனத்தில் எடுத்து, அவர்கள் தங்கள் தவறை உணரும் வகையில் போதுமான பணிக் காலப் பயிற்சிகள் வழங்க வேண்டும். சாதிய வன்மத்துடன் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள்,சாதி வெறியர்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை ஆசிரியர் சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். சாதி ஒழிப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்கி, குழந்தைப் பருவ மாணவர்களுக்குப் பாதுகாப்பான வளாகங்களாகப் பள்ளிகள் என்றென்றைக்கும் நீடிக்கச் செய்ய அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொள்ளும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டப்பட வேண்டும். குறைந்தபட்சம், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கவும், தேசிய உறுதிமொழிக்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளவும் முற்படும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படைக் கடமையாகும். சகோதரத்துவத்தை மிக எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்குவது அவசியம். தேசிய உறுதிமொழியில் உள்ள, ‘இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறந்தவர்கள்’ என்ற வாசகத்தின் பொருளையும், உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகுஅதை மீறக் கூடாது என்பதையும் குழந்தைப் பருவத்தில் உள்ள மாணவர்கள் உணர்ந்திட வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயல்பாட்டு முறை அமைய வேண்டும். ஒவ்வொருவரும் கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்வதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம்உத்தரவாதம் அளிக்கிறது. சகோதரத்துவம் இல்லாவிட்டால் சுதந்திரமும் சமத்துவமும் அர்த்தமற்ற சொற்களே என்பதை நாம் உணர வேண்டும்.‌ சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் போற்றுவோம். - மின்னஞ்சல்: spcsstn@gmail.com

Tuesday, September 26, 2023

September 26, 2023

நோட்டாவை நோக்கி நகரும் ஆசிரியர்களைத் தன்வயப்படுத்துமா விடியல் ஆட்சி?



நோட்டாவை நோக்கி நகரும் ஆசிரியர்களைத் தன்வயப்படுத்துமா விடியல் ஆட்சி?

பொதுவாகவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு எப்போதும் வாரி வழங்குவதாக ஒரு பேச்சு இங்குண்டு. அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளைக் கொட்டிக் கொடுப்பதாகப் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு கருத்து ஆழ வேரூன்றி இருப்பது மறுப்பதற்கில்லை. அதன் காரணமாகவே ஆசிரியர்கள் வாக்குகள் திமுகவிற்கே என்ற எண்ணம் பிற கட்சிகளிடம் காணப்படுவது மலிந்துள்ளது. இந்தக் கூற்று மிகவும் தவறானது. இத்தகைய தவறான உண்மைக்குப் புறம்பான கருத்து காரணமாக ஆசிரியர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் ஏராளம்.

இதன் காரணமாகவே, அஇஅதிமுக தலைமை உள்ளிட்ட எவருக்கும் ஆசிரியர்கள் மீது எப்போதும் முழுதாக நம்பிக்கை இருப்பதில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் அவர்கள் ஆட்சியில் இருக்கும் காலக்கட்டங்களில் கிள்ளிக் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதன் உச்சகட்டமாக 2003 இல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் ஒற்றைக் கையெழுத்தில் ஒருசேர பணிநீக்கம் செய்து ஆணைப் பிறப்பித்த கருப்பு நாளை யாரும் மறப்பதற்கில்லை. இவர்களால் தமக்கு எந்தவொரு பயனும் இல்லை என்கிற ஆழ்மன வெறுப்புணர்ச்சியே அதற்குரிய காரணமாகக் கருதிக் கொள்ள நிறைய வாய்ப்புண்டு.

அரசியல் சார்பற்ற நிலையில் எந்த ஆட்சி குறித்தும் இது நம் ஆட்சி என்று கவலை கொள்ளாமல் பொதுவான ஆசிரியர் இயக்கங்களுக்குள் அடையாள அரசியல் மற்றும் கட்சி சார்பு மனநிலையை விதைத்து தலைமைப் பதவி ஆசையுடன் ஊசலாடிய நபர்களை வலைவிரித்து ஒட்டுமொத்த ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக ஆசிரியர் இயக்கத்தை உடைத்ததில் திமுக மற்றும் இடதுசாரி இயக்கங்களுக்கு நிறைய பங்குண்டு.

தமிழக அளவில் குறிப்பாக திமுகவிற்கு வலுவான இயக்கமாக ஆசிரியர் மன்றம் ஒன்று இருப்பது போல் ஆசிரியர்கள் மத்தியில் அஇஅதிமுக சார்புடைய ஓர் இயக்கத்தை வலுவானதாகக் கட்டமைக்க இன்று வரை இயலவில்லை என்பதே உண்மை.

அரசு ஊழியர் இயக்கங்கள் பலவும் இன்றும் கூட தேசிய, மாநில கட்சிகள் சார்புடையவையாக உள்ளது அறியத்தக்கது.

அதேவேளையில் ஆசிரியர் இயக்கங்களுக்குள் இந்த நிலை இல்லை. திமுக மற்றும் சிபிஎம் கட்சி சார்ந்த ஒரு சில ஆசிரியர் இயக்கங்களைத் தவிர, பெரும்பாலான ஆசிரியர் இயக்கங்கள் இப்போது வரை கட்சி சார்பற்று பொதுவானவையாக துணிந்து திடமுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இதுபோன்ற கட்சி சார்புடைய இயக்கங்கள் தமிழக அரசியல் வரலாற்றில் பெரிதாக எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. நம்பும்படியாக எதையெதையோ சொல்வார்கள். ஆனால் எதுவும் உண்மையல்ல. எந்த மயிலாவது தாமாக இறகொன்றை இரந்து கேட்பவருக்குக் கொடுத்து விடுமா என்ன?

தன்னலத்திற்காகப் பொதுநலத்தைப் பணயம் வைத்த துரோக வரலாறே ஆசிரியர் போராட்ட களத்தில் வழிநெடுகக் காணப்படுவது வருந்தத்தக்கது. வேதனைக்குரியதும் கூட. இந்த ஆசிரியர் இயக்க உடைப்பு வேலை இன்றும் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் ஒவ்வொரு நிலையிலும் தொடர்வதைக் காண சகிக்கவில்லை. கடந்த காலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்த போராட்ட களங்கள் அண்மைக்காலமாகப் பிசுபிசுத்து வெறும் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் போக்கிடமாக ஆகிப் போனதற்கு தனிமனித பதவி வெறியும் கண்மூடித்தனமாக நம்பும் கட்சி மோகமும் முக்கிய காரணங்கள் ஆகும்.

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாய்விட்டுச் சொல்லவும் முடியாமல் கட்சி அபிமானத்திலிருந்து விட்டு விலகவும் இயலாமல் தணலில் மாட்டிய பிஞ்சு உயிராக அண்மைக்காலத்தில் கட்சி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் நிலையுள்ளது. இஃது ஆசிரியர்களின் பெரும் துயரம் ஆகும். வெறுப்பு மிகுந்த எதிரியை எதிர்த்து இழப்பதற்கு இனி எதுவுமில்லை, அடைவதற்கு ஓர் இலக்கு இருக்கின்றது என்று உயிரைக் கொடுத்து போராட முடியும். அன்பிற்கினிய பச்சைத் துரோகியுடன் இனி எவ்வளவு காலத்திற்கு மறத்துப்போன ஆன்மாவுடன் கைகோர்த்து நடைபோடுவது என்று அல்லாடித் தவிக்கும் ஆசிரியர் இயக்கவாதிகள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாக இருப்பது கொடுமையானது. முன்பு போல் இப்போது யாரையும் அவ்வளவு எளிதாக அதிக காலம் ஏமாற்ற முடியாது. இதை எளிய அணுகுமுறையையும் தியாக உணர்வையும் கட்சி சார்பில்லாத போராட்ட குணத்தையும் காலில் போட்டு மிதித்து பக்கா பகட்டுக் கட்சிக்கார அரசியல்வாதி போல் ஆகிவிட்ட வெள்ளையும் சொள்ளையும் பளிச்சிடும் ஆசிரியர் தலைமை உணருதல் அவசியம். முகத்திற்கு நேராக எதிர்த்துக் கேள்வி கேட்க துணிவற்ற பலரும் தம் முதுகிற்கு பின் காரித் துப்புவது குறித்து சிந்திப்பது நல்லது.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட நிலையில் இன்றைய ஆசிரியர்கள் நிலையுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த கால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ஆசிரியர் விரோத வடுக்களுக்குத் தீர்வாக விடியல் அரசைத் துணையாகக் கொண்டது மறைப்பதற்கில்லை. பழைய ஓய்வூதியம், சம வேலைக்குச் சம ஊதியம், ஊதிய முரண்பாடுகள் களைதல், பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த காலத்தைப் போன்று காலமுறை ஊதியம் வழங்குதல், பழைய ஊக்க ஊதியம், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் விடுவித்தல் முதலானவற்றிற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பி இருந்தவர்களுக்குக் கிடைத்தது என்னவோ பெருத்த ஏமாற்றம் மட்டுமே என்றால் மிகையில்லை.

அதாவது இருண்ட வாழ்விலிருந்து மீள முடியா நரக வாழ்வில் தாமாகவே போய்விழுந்த குற்ற உணர்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆசிரியரும் உழல்வதாக அறியப்படுகிறது. விளம்பரங்கள் பள்ளிக்குத் தேவை தான். ஆனால், வெற்று விளம்பரங்களால் கல்வி பாழாக்கப்படுவதை எவராலும் ஏற்கவியலாது. கற்பித்தலை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு இணையத்தோடும் பதிவேடுகளோடும் நொடிகள் தோறும் மல்லுக்கட்டும் முழுநேர வேலையில் ஆசிரியர்களின் ஆவி போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அனைவரின் முழுமுதற் கடமையாக உள்ளது. முதன்மையானதும் பயன்மிக்கதும் ஆசிரியர் நலனுக்கு உகந்ததுமான பல்வேறு கோரிக்கைகளும் ஆழ்கடலில் கொண்டு போய் போடப்பட்டவையாகவே இன்றுவரை காணப்படுகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. வந்த பிறகு வேறு பேச்சு என்பதில் ஆசிரியர்களுக்கு எப்போதும் உடன்பாடில்லை. பழைய கொடிய பிசாசுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி ஆசிரியச் சமூகத்தை அதிலிருந்து விடுவிக்காமல் மேலும் புதிய புதிய பேய்களை ஏவிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது என்பது கொடுமையானது.

ஆம். எண்ணும் எழுத்தும், கிணற்றைத் தேடி அலைந்த கதையாக உயிரை மாய்க்கும் இணைய வழி மதிப்பீட்டு முறைகள் மற்றும் ஆய்வு படையெடுப்புகள், பதவி உயர்வுகள் கலந்தாய்வைக் கொள்கை முடிவெடுத்து நடத்துவதில் காலம் தாழ்த்துதல், அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அறிவுறுத்துதல், மறைமுகமாக காலை உணவுத் திட்டம் வாயிலாக ஆசிரியர் பெருமக்களை 12 மணிநேரம் உழைக்க வைக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை ஏவிவிடுதல் முதலான புத்தம் புதிய பிசாசுகளுடன் போராடி உடல் மற்றும் உள நலன் கெட்டு, சுயமரியாதை இழந்து, அகால மரணம் அடையும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது இன்றியமையாதது.

இத்தகைய சூழலில், இந்திய துணைக்கண்ட ஒன்றிய அளவில் திராவிட மாடல் அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்கள் நலத்திட்ட உதவிகளையும் தொலைநோக்கு சிந்தனைகளையும் முன்னெடுக்கும் முன்முயற்சிகள் அனைத்திலும் உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன்கள் காக்கப்பட தோள்கொடுப்பது அரசின் கடமையாகும். இன்றைய பாசிச, மதவாத, வெறுப்பு அரசியல் மற்றும் அவற்றின் அனைத்து மக்கள் விரோத மற்றும் குரோத செய்கைகளுக்குத் தவழ்ந்து தலையாட்டும் திராணியற்று திராவிடத்தை முழுக்குப் போட்டு தலைமை குழப்பம் நிலவும் கைப்பாவை அரசியல் மீது பின்தொடரும் நோக்கும் போக்கும் ஆசிரியர்கள் மத்தியில் இருப்பதாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் திமுகவை விட்டாலும் ஒர் அமைதியும் இணக்கமும் குறைந்தபட்ச மகிழ்ச்சியும் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்திட வேறு கதியில்லை என்பதே நடப்பியல் ஆகும்.

அதேவேளையில், நம்பகமும் நம்பிக்கையும் நிறைந்த விடியல் அரசு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் 100 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதை நினைத்து ஆசிரியர்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கத்தான் வேண்டியுள்ளது. விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் தம் நியாயமான எதிர்ப்பை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அச்சுறுத்தும் சனாதனமும் போலியான சமூகநீதிக் கூட்டணியும் வேண்டவே வேண்டாம் என்று நோட்டாவை நோக்கி நகரும் அபாயகரமான சூழலைத் தடுத்து நிறுத்தி சரிந்து இருள் கவிந்த பாதாளத்தில் விழும் இழந்த நம்பிக்கையின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்து புதியதொரு விடியலைத் தரவேண்டும் என்பது ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பாகும்.

முனைவர் மணி கணேசன்

Saturday, August 26, 2023

August 26, 2023

அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்: நோக்கம் என்ன?



அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய வீட்டுப் பிள்ளைகள் சுயமாக வாசிக்கத் (Independent Reading) தொடங்கப்பட்டது வாசிப்பு இயக்கம். அதன் பொருட்டு அவர்கள் கைகளில் சின்னஞ்சிறு புத்தகங்களை - எளிய மொழியில் - படங்களுடன் தருவது வாசிப்பு இயக்கத்தின் அடிப்படை நோக்கம்.

பழைய சுமைக்கு இடமில்லை:

குழந்தைகள் புத்தகங்களை விரும்பிக் கையில் எடுப்பதற்கான ஏற்பாடு இது. இந்த விருப்பம் பாடப்புத்தகம் வரை பரவி விரிய வேண்டும் என்பதும் வாசிப்பு இயக்கத்தின் எதிர்பார்ப்பு. எந்தப் புதிய முயற்சியின் மீதும் பழைய நிழல்கள் வந்து வந்து விழுகின்றன. புரிதல்தான் முதல் தேவை.

புரிதலற்ற தடுமாற்றம் பயணத்தின் வேகத்தைக் குறைக்கிறது. சில நேரங்களில் பயணத்தைப் பாதியில் நிறுத்துகிறது. ஆபத்தான பழைய நிழல் எது? குழந்தைகளைக் ‘காலிப் பாத்திரங்க’ளாகப் பார்க்கும் பார்வைதான் பழைய நிழல். பெரியவர்கள் விரும்பியதை எல்லாம் அதற்குள் போடலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் பொருத்தமான வாய்ப்பு தேவை. அதைத் தருவது பெரியவர்களுக்குக் கடினம். உபதேசம் வழங்குவது எளிது. ஆனால், உபதேசத்துக்கான இடமல்ல வாசிப்பு இயக்கம். இன்னொரு நிழலும் இருக்கிறது. அது படைப்பாளிகளின் நிழல். இது வாசிப்பு இலக்கியம். புத்தம் புதுசு. படைப்பாளிகள் தாங்கள் சுமந்துகொண்டிருக்கும் மொழியையும் சிந்தனையையும் இறக்கி வைப்பதற்கான இடமல்ல வாசிப்பு இயக்கப் புத்தகம். இங்கு, குழந்தைகள் முக்கியம்; குழந்தைகள் வாசிப்பது முக்கியம். நீங்களும் உங்கள் சுமையும் முக்கியம் இல்லை.

வாசிப்பு மொழி:

1990களின் தொடக்கத்தில், அறிவொளி இயக்கம் கண்டுபிடித்தவை பல. அவற்றில் ஒன்று-வாசிப்பு மொழி. விருதுநகர் மாவட்ட அறிவொளி ‘வாசல்’ என்ற பெயரில் கற்போர் பத்திரிகை வெளியிட்டது. அதில், ‘நம்ம நாடு’ என்ற தலைப்பில் ஒருமுறை செய்தி வெளியானபோது, கற்போர் வாசிக்கச் சிரமப்பட்டனர். ‘நம் நாடு’ என்று எழுதினால் வாசிப்பது எளிது என்றார்கள் அறிவொளித் தொண்டர்கள்.

அதே போல், ‘வாருங்கள்’ என்று எழுதியபோது வாசிக்கத் திணறினார்கள். ‘வாங்க’ என்பதைச் சுலபமாக வாசித்தார்கள். பேச்சு மொழி, எழுத்து மொழியைத் தாண்டி, இது - வாசிப்பு மொழி. சின்னஞ்சிறு வாக்கியம், சற்று வேடிக்கையான உள்ளடக்கம், தெரிந்த எளிமையான சொற்கள், கதையின் அடிப்படையான சில சொற்கள் மீண்டும் மீண்டும் வருதல், நிறைய படங்கள் - வாசிப்பை நோக்கிக் குழந்தைகளை ஈர்ப்பவை இவை. இந்தப் புரிதல் வாசிப்பு இயக்கத்தின் அடிப்படை. 53 புத்தகங்கள்:

வாசிப்பு இயக்கத்தின் முதல் கட்டமாக, 53 சின்னஞ்சிறு புத்தகங்களைத் தமிழ்நாடு அரசு அச்சிட்டு, முன்னோட்ட ஆய்வுக்கு (Pilot Study) சில பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது முதல் அடி; ஆனாலும் முக்கியமான அடியெடுப்பு.

புத்தகங்களைத் தந்தவர்கள் பலர். உதயசங்கர், சாலை செல்வம், அ.வெண்ணிலா, முருகேஷ், கொ.மா.கோ.இளங்கோ, கலையரசி எனப் படைப்பாளிகள் பலரின் பெயர்கள் கண்ணில் படுகின்றன. இரண்டு முறை துணைவேந்தராக இருந்தவரும், அரசு நிறுவிய பல்வேறு ஆணையங்களின் தலைவராகப் பொறுப்பு வகித்தவரும், இன்று 83 வயதை எட்டியவருமான வே.வசந்திதேவியும் (‘குழந்தையின் சிரிப்பு’) வாசிப்பு இயக்கப் படைப்பாளிகளில் ஒருவர். மறுபுறம், ஒன்பதாம் வகுப்பு மாணவியான ரமணியும் (‘பூக்களின் நகரம்’) படைப்பாளிகளில் ஒருவர்.

குழந்தைகளின் வாசிப்பு வேகத்தையொட்டி, ‘நுழை’, ‘நட’, ‘ஓடு’, ‘பற’ என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் புத்தகங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இவை விதிகள் அல்ல. நெகிழ்வான பகுப்பு முறைகள்... அவ்வளவுதான். யாரும் எந்தப் புத்தகத்தையும் கையில் எடுத்து வாசிக்கலாம். குழந்தைகளின் வாசிப்போடு கூடவரும் ஆசிரியர் அல்லது தன்னார்வலர் தரும் ஊக்கத்தைப் பொறுத்தது அது.

திருப்தி அடைந்தால் பயணம் நின்றுவிடும். அடுத்த எட்டில் வர வேண்டிய புத்தகம் எப்படி இருக்க வேண்டும்? மொழி இன்னும் எளிமைப்பட வேண்டும்; பறவை, விலங்கு, செடி கொடி மரம், ஆறு, மலை, வானம் சார்ந்த உள்ளடக்கம் - குறிப்பாக, இயற்கை சார்ந்த உள்ளடக்கம் - இன்னும் வலுப்பெற வேண்டும் என்பவை அடுத்த எட்டுக்கான உரையாடல்களில் தெறித்த நேர்மையான சிந்தனைகள். களத்தின் காட்சிகள்:

திட்டம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் களம். திட்டம் பிரகாசிப்பது - களத்தின் வெற்றியால்தான். வகுப்பறைகளும் பிள்ளைகளும்தான் இங்கு களம். ‘நான் வாசித்துவிட்டேன்!’, ‘நானாக வாசித்துவிட்டேன்!’ என்று இன்று வகுப்பறைகளில் ஒலிக்கும் குழந்தைகளின் குரல்கள் களத்தின் வெற்றி அடையாளங்கள். ‘பகல் கனவு’ நூலில், ‘பசித்த வேங்கைகள் போல் பள்ளிக் குழந்தைகள் (கதைப்) புத்தகங்களின் மீது பாய்ந்தனர்’ எனக் கல்வியாளர் கிஜுபாய் பதேகா எழுதுவார். அந்தக் காட்சி உண்மைதான். வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் மீது பசித்த புலிகளாய்ப் பிள்ளைகள் பாய்வதை, இன்று வகுப்புக்கு வகுப்பு பார்க்க முடிகிறது. பிரிந்தவர் ஒன்று கூடுவது போன்ற காட்சி அது.

புத்தகத்தைக் கையில் எடுத்ததும் உடனடியாகப் பிள்ளைகள் வாசிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். ‘வாசி’ என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை. ‘4 புத்தகம் படித்துவிட்டேன்... 7 புத்தகம் படித்துவிட்டேன்’ என்று பிள்ளைகள் சிலர் உற்சாகக் குரல் எழுப்பும்போது வகுப்பறையில் இதுவரை தோன்றாத புது மலர்ச்சி!

மறுபுறம் - சரியாகப் பேச்சு வராத மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் புத்தகங்களை வாரி மார்போடு அணைத்துக் கொள்கின்றனர். தட்டுத் தடுமாறி வார்த்தைகளை வாசிக்கின்றனர். வாசித்துவிட்டுப் பூவாய்ச் சிரிக்கின்றனர். நம் கண்கள் நனைகின்றன. ஒரு பக்கம் கம்பீரம். இன்னொரு பக்கம் கனிவு. அதுதான் வாசிப்பு இயக்கக் களம். திறந்த கதவுகள்:

பயணத்தின் நோக்கம் - கதவுகளைத் திறப்பதுதான். திறந்த கதவுகளுக்குள் புதிய ஒளியைக் காண்பதுதான். பார்வைக்கும் வெளிச்சத்துக்கும் வராத - அங்கீகாரம் இல்லாமல் விடுபட்டுப்போன எண்ணற்ற திறமைகளைக் கண்டுபிடித்துக் கைகோத்திருக்கிறது வாசிப்பு இயக்கம்.

வாசிக்கும் குழந்தைகளை விதம்விதமாய் உற்சாகப்படுத்தும் தன்னார்வலர்கள் ஒரு பக்கம்; புத்தகங்களை வாசித்ததும் தாங்களே ஒரு கதை சொல்ல முன்வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் இன்னொரு பக்கம். வாசிப்பு இயக்கம் கண்டுபிடித்த நட்சத்திரங்கள் இவை. ‘ஒவ்வொருவர் சொல்லவும் ஒரு வரலாறு இருக்கிறது; ஒரு கதை இருக்கிறது’ என்கிறது வாசிப்பு இயக்கம்.

வாசிப்பு இயக்கம் திறந்துவிட்ட இன்னொரு கதவு - பெண் கல்வி வாசிப்பு மையம். எழுத்தறிவு இயக்கங்கள்வழி எழுதவும் படிக்கவும் சொற்பமாய்க் கற்றவர்கள் - அரைகுறையாகப் படித்துப் பள்ளிப் படிப்பை நிறுத்தியவர்கள் - குறிப்பாகப் பெண்கள் - சின்னஞ்சிறு புத்தகங்களைக் கையிலெடுத்துத் தொடர்ந்து வாசிக்கப் ‘பெண் கல்வி வாசிப்பு மையங்க'ளையும் அங்கு வாசிப்பதற்கான புத்தகங்களையும் அரசு உருவாக்க வேண்டும் என்ற குரல் இன்று வலுப்பட்டு வரக் காரணமானது - பள்ளிப் பிள்ளைகளின் வாசிப்பு இயக்கமே!

‘எனக்கொரு கனவு இருக்கிறது’ எனத் தொடங்கி, மார்ட்டின் லூதர் கிங் 1963இல் நிகழ்த்திய உரை மறக்க முடியாதது. நமக்கும் ஒரு கனவு இருக்கிறது. எளிய வீட்டுக் குழந்தைகளின் கைகளில் அவர்கள் வாசிக்கச் சின்னஞ்சிறு புத்தகங்களைத் தருவதோடு, அவர்களின் உழைப்பாளிப் பெற்றோர் கைகளிலும் புத்தகங்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு!

- தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

Monday, August 07, 2023

August 07, 2023

எண்ணும் எழுத்தும் அனைத்துக் கல்விக்கும் ஆணிவேர்!

எண்ணும் எழுத்தும் அனைத்துக் கல்விக்கும் ஆணிவேர்!



குழந்தைகளை மதிப்புடன் நடத்துவ திட்டம். இது முதல்வரின் கனவு திட்டம். இத்திட்டத்தின்படி, ஆசிரியர்கள் குழந் தைகளுக்கு அன்பாக, செயல்பாடுகள் வழி கற்றுக்கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு செயல் பாட்டிலும் குழந்தைகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படுகிறது. அதனால், ஒவ்வொரு குழந்தையும் வகுப்பில் சுய மதிப்பு மிக்கவர்களாக வளர்ந்து வருகி றார்கள். ஆம்! காலங்காலமாக அதிகாரத் நிற்கு அடிபணிந்தே. குழத்தைகள் மனப்பாடம் செய்து, புரிந்தும் புரி யாமலும் மகிழ்ச்சியற்றும் கல்வியை சுற்றுவந்தனர். ஆனால், இன்று ஒவ் வொரு வகுப்பறைகளிலும் குழந் தைகளின் ஆரவாரம், சத்தம் பலமாகக் கேட்கின்றது.

ஒவ்வொரு நிமிடத் தையும் அனுபவித்து. மகிழ்ந்து ஒவ்வொரு செயல்களில் ஈடுபட்டு, ஆசிரியர் கொடுக் கும் தகவல்களை உள்வாங்கி, புரிந்து, அதில் சிக்கல் இருந்தால், தனக்குந்தானே பகுத்து எண் எழுத் ஆராய்ந்து, சகதண்பனிடம் விவா இத்து. உரையாடி.. ஆசிரியரின் வழிகாட்டுதல்படி அச்சிக்கலைத் தீர்த்து, நற்புரிதலுடன் சுற்றுவரு கின்றனர்.

கொரோனா பெருந்தொற்றி னால் 19 மாதம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று மக்கள் புலம்பித் தீர்த்தனர்.

இதனை கருத்தில்கொண்டு, 2022 ஆம் ஆண்டு எண்ணும் எழுத் தும் திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆரம் பிக்கப்பட்டது. ஆரம்பித்தபோது, மிகப்பெரிய சவாலாக இருந்தா லும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக் குநர் மற்றும் இணை இயக்குநரின் பெரும் முயற்சியில், டெலிகிராம் ஆப் வழியாக ஆசிரியர்களுடன் தொடர் உரையாடலில், சவால் என் சரிசெய்யப்பட்டு, இத்திட்டம் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.kaninikkalvi.blogspot.com

வரகுப்பறையில் ஏற்படும் சிக் கல்கள், துணைக் கருவிகள் தயர் ரிப்பதில் ஏற்படும் சிக்கல்கள், கால அட்டவணையை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்கள், வகுப்பறையை கையாள்வதில் ஏற்படும் சிக்கல் சுள், நேர மேலாண்மையில் உள்ள சிக்கல், தேர்வுகளை இணைய வழியில் மேற்கொள்வதில் ஏற்ப டும் இடர்பாடுகள் என அனைத் துச் சிசுகல்களும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தீவிர ஆலோசனையை கல்வியா ளர்களிடம் பெற்று, குழத் தைகளின் மகிழ்ச்சியான கற்றலுக்கு உத்திரவாதம் ஏற்படுத்தி தந்துள்ளார். த்தும் SCERT இயக்குநர் மற் தும் றும் இணை இயக்குநரின் பணியினைப் பாராட்டியே ஆகவேண்டும். இன்றளவும் ஆசி ரியர்களுடன் தொடர்ந்து உரை யாற்றி வருகின்றனர்.. எண்ணும் எழுத்தும் திட்டத் தால் குழந்தைகளின் கற்றல் அடை வுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது. இதனை. குழந்தைகளின் வாசிப்பு, தைரியமாக விடைய னித்தல், சந்தேகம் கேட்டல், சரள மாக பேசுதல், யோசித்து பதில் அளித்தல் போன்ற பல நிகழ்வுகள் வழியாக உறுதிசெய்யலாம். எண் ணும் எழுத்தும் திட்டம் 2023-24 ம் ஆண்டுகளில் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மகிழ்ச்சியான கற்றலை உறுதிபடுத்தியுள்ளது.செயல்பாடுகள் வழியாக கற்பித்தலை மேற்கொள்வதால் குழந்தைகள் தகவல்களை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத் துக்கொள்ளவும், தக்கவைந்துக் கொள்ளவும் செய்கின்றார்கள், மேலும், நிஜவாழ்க்கையில் கற்றுக் கொண்டதைப் பயன்படுத்துவ தன் மூலம் அவர்களின் கருத்து களுடன் வலுவான தொடர்பை உருவாக்கிக் கொள்கின்றார்கள். ஒன்றாம் வகுப்பு குழந்தை டிராபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிகின் றது வண்டியை நிறுத்தவேண்டும். என சொன்னதைக் கூறி மகிழும். பெற்றோரைக் காண்கின்றேன். விளையாட்டின் வழி ஆசிரியர்கள் கற்பித்ததன் விளைவு. வகுப்பறைக் குள் உரையாடல்கள் நிகழ்வதைப் பார்க்கின்றேன். வானவில் மேடை யில் ஏறி நின்று பேசும் குழந்தையின் தைரியம் பிரமிக்க வைக்கின்றது. வகுப்பறைக்குள் குதிக்கின்றனர். ஓடுகின்றனர். ஒவ்வொரு முறை தாவிக்குதிக்கும்போதும் ஒரு எழுத்து கற்பிக்கப்படுகிறது.kaninikkalvi.blogspot.com ஒரு எழுத்து வலுவூட்டப்படுகின்றது. ஒரு எழுத்து குழந்தைக்குத் தெரிய வில்லை என்பதை அறியமுடிகின் ரது. அவனது தேவைகள் ஆசிரிய ருக்குஉணர்த்தப்படுகிறது. இப்படி ஓடி ஆடிபடித்தாலும், ஒருவருக்கொருவர் சண்டை இல்லை. வகுப்பறை முழுவதும் மகிழ்ச்சி பன்ணிக்குள் நுழைந்த வுடன் ஆசிரியருக்கு சகமாணவ னுக்கு தகும் காலை வணக்கத்தில் தொடங்குகிறது மகிழ்ச்சியான கற்றல். அது இறுதி வகுப்புவரை உறுதிபடுத்தப்படுகிறது.ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு. -மிஸ், தாளைக்கு,நான் இந்த ப்ராஜெக்ட்டை செய்து கொண்டு வருகின்றேன்." எனும் குரல்கள் ஒவ்வொரு நாளும் பெருகிவருகின் றன. வீட்டிலும் கற்றல் தொடர் வதை உறுதிபடுத்துகின்றன. அது மட்டுமல்ல, ஒவ்வொரு முறை வகுப்புக்குள் நுழையும்போதும் புதிய, புதுமையான கருத்துகளைக் கொண்டுவருகின்றனர். படைப்பு சிந்தனைத்திறன் மிக்கவர்களாக வளர்கின்றார்கள். kaninikkalvi.blogspot.com.ஆக, குழந்தை கள் கற்பனைகளுடன் வளர்கின்ற னர், தானே கற்றல் இத்திட்டத் தின் வெற்றியை உறுதி செய்கின்றது.

ஒவ்வொருவரும் அவரவர் கற்றல் திறனுக்கு ஏற்ப சொந்த வேகத்தில் செல்கின்றனர். ஆசிரி யர் தன் செயல்வழிக் கற்றல் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ் வேறு கற்றல் பாணிகளை வழங்க முடிகின்றது.

தாம் கற்றவற்றை நிஜவாழ்க்கைச் சூழ்நிலைகளில் பயன்படுத்துவ தால், கோட்பாடு மற்றும் நடைமு றைக்கு இடையே உள்ள இடைவெ ளியைக் குறைக்க உதவுகிறது. கற்றல் அனுபவத்தை குழந்தைகளின் உண் மையான உலகில் மிகவும் அர்த்த முள்ளதாகவும், பொருந்தக்கூடிய தாகவும் மாற்றுகிறது.

குழத்தைகள் வாழ்நாள் முழுவ துக்கும் கற்கும் அனைத்துக் கல்விக் கும் அடிப்படையாகவும், ஆணி வேராகவும் அமையும் தொடக்கக் கல்வியில் சிறப்பான திட்டமாக எண்ணும் எழுத்தும் அமைந்திருப் புது உண்மை

௧. சரவணன், சிறார் எழுத்தாளர்

Saturday, July 29, 2023

July 29, 2023

பள்ளி வகுப்புகளில் பயன் தரும் மாற்றங்கள்

பள்ளி வகுப்புகளில் பயன் தரும் மாற்றங்கள்

இடை நிற்றலைத் தவிர்த்தல், தேர்ச்சி சதவீதத்தைக் கூட்டுதல், கற்றலில் சிக்கல் கொண்ட மாணவர்களின் திறன்களை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்தல், பெற்றோருடன் கலந்து ஆலோசித்துத் தீர்வு காண முயலுதல், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெறுமனே ‘ஆய்வு’ செய்தல், குறை கூறுதல், குற்றம் கண்டுபிடித்தல், கடிந்து கொள்ளுதல் என்கிற பாணியில் இருந்து முற்றிலும் மாறி களத்தில் இறங்கி, பள்ளித் தலைமையாசிரியர், பிற ஆசிரியர்களுடன் கைகோத்து, நேரடியாகப் பயன்தருகிற பணிகளை முன்னெடுப்பதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வகையில், மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்காக, ஜூலை 26 அன்று, பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ‘பள்ளிக் குழுக் கட்டமைப்பு’ கூட்டம் பயன் உள்ளதாய் இருந்தது.

இன்று தமிழக மாணவர்களிடம், குறிப்பாக அரசுப் பள்ளிகளில், நாம் காணும் கவலைக்குரிய அம்சம் – கற்றலில் ஆர்வம் இன்மை. சில புதிய முயற்சிகள் மூலம் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க முடியும். பெரும்பாலும் எல்லாப் பள்ளிகளிலும் மாணவ மாணவியர், வகுப்பறையில் குறிப்பிட்ட ஓர் இடத்திலேயே அமர்கிறார்கள். இந்த நடைமுறையை மாற்றி, ஒவ்வொரு வகுப்பு தொடங்கும் போதும், மாணவர்களை இடம் மாறி அமரச் செய்யலாம். வாரத்துக்கு ஒருமுறையேனும் இந்த நடைமுறையைச் செயல்படுத்தலாம். ‘புதிய இடம்’; ‘புதிய கோணம்’- மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

எந்தெந்த நாட்களில் என்னென்ன பாடங்கள் நடத்த வேண்டும் என்று முறையாக அட்டவணைப்படுத்தப்பட்டு அவ்வாறே வகுப்புகள் நடைபெறுகின்றன. இயந்திர கதியில் இயங்குகிற இந்த முறையில் சிறிய திருத்தம் செய்யலாம். ஒரு நாளைக்கு ஒரு வகுப்பேனும் ‘அட்டவணைக்கு உட்படாத’ வகுப்பாக அன்றன்று தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப அமைந்தால் ஒரு ‘நிவாரணம்’ தருவதாய் இருக்கும். இதேபோன்று ஒவ்வொரு பாடத்துக்கும் (`சப்ஜெக்ட்’) குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் நடத்துவதில் இருந்துசற்றே மாற்றி, மாதம் ஒருமுறையேனும் அதே பள்ளியின் வேற்றுத் துறை ஆசிரியர் பாடம் எடுக்கலாம். உதாரணத்துக்கு, தமிழ் ஆசிரியர் - அறிவியல்; கணித ஆசிரியர் – ஆங்கிலம் என்று மாறிப் பாடம் எடுத்தால், ஆசிரியர்களுக்குப் புத்துணர்வு; மாணவர்களுக்குப் ‘புதிய பார்வை’ கிட்டும். யோசித்துப் பாருங்களேன்….. உடற்பயிற்சி ஆசிரியர், வேதியியல் பற்றிப் பேசினால்…. ஆங்கில ஆசிரியர் கம்பராமாயணம் வகுப்பு எடுத்தால்..? மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அப்போதே தூண்டிவிடும். அல்லவா? சோதனை முயற்சிதான்; ஏன் முயற்சிக்கக் கூடாது.? ஒரு பாடம் முடிந்தவுடன் கையோடு அந்த குறிப்பிட்ட பாடத்தின் மீது மாதிரித் தேர்வு நடத்தி, அப்போதே மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார் செய்யலாம்.

இயன்றவரை மாதம் ஒரு நாளேனும் மாணவ, மாணவியரில் இருந்து ஒருவரை அழைத்து. நடத்தி முடித்த பாடத்தைப் பிறருக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுமாறு பணிக்கலாம். அவ்வப்போது மாணவரிடம் இருந்து யாரேனும் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்தப்படுகிற முறை குறித்து பின்னூட்டம் தரச் சொல்லி வாய்ப்பு தரலாம். பல சமயங்களில் மாணவரின் கருத்துகளில் உள்ள நியாயத்தை, பெற்றோர் உட்பட யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்தக் குறை நீக்கப்பட வேண்டும்.

ஒரு மாணவி அல்லது மாணவனின் தனித்திறனை, அவ்வந்த வகுப்புகளில் அவ்வப்போது வெளிக் கொணர்ந்து மனதாரப் பாராட்ட வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு மாணவி நன்றாகப் பாடுகிறார் என்றால், கால இடைவெளியில், தனது வகுப்பில் அவ்வப்போது பாட வாய்ப்பு கொடுத்து வாழ்த்தினால் எப்படி இருக்கும்..? பள்ளிப் போட்டிகளில் கலந்து கொண்டு வென்றால் கிடைக்கிற பரிசுகளை விட இது மிகுந்த மனமகிழ்ச்சியுடன் வகுப்புக்கு வரத் தூண்டும்.

வகுப்புகளில் அவ்வப்போது மாணவர்களுக்கு உடல்ரீதியாக ஏதேனும் ‘வேலை’ தந்து கொண்டே இருக்க வேண்டும். எழுந்திருக்க, இடம் மாறி அமர்ந்து கொள்ள, வகுப்புக்குள் நடக்க, குதிக்க…ஏதேனும் ‘உடல் அசைவு’ அவசியம் ஆகும். இதே போன்று, மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாகப் புதிர்கள், வினாடி - வினா போன்ற பயிற்சிகள் வகுப்பு நேரத்தை சுவாரஸ்யம் ஆக்கும். இவையெல்லாம் விட மிக முக்கியமானது – யாரெல்லாம் தவறாமல் எல்லா நாளும் பள்ளிக்கு வந்து 100% வருகை புரிகிறார்களோ, அவர்களுக்கு ஒவ்வொரு மாத முடிவிலும் ஊக்கப் பரிசு வழங்க வேண்டும். கல்வியாண்டு முடிவில் பரிசு தந்து என்ன பயன்..? மாதந்தோறும் ஊக்கப் பரிசு – அதுவும், ‘வீட்டுக்கு’ பயன் தருகிற விதத்தில் கிண்ணம், மின்னணுப் பொருட்கள், ஏன்… அரிசி பருப்பாகக் கூட இருக்கலாம். வழங்கினால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில், வறிய நிலையில் உள்ள பெற்றோருக்கும் ஆர்வம் கூடும். அதிக நிதிச் செலவு இல்லாமலே இதனை நிறைவேற்ற முடியும். நூறு சதவீத வருகையை உறுதிப்படுத்தும் மிக நல்ல திட்டமாக இது விளங்கும். இதை பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்கலாம்.

நிறைவாக, கல்வி நிலையங்கள் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும். தனித்தனியே ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்று இருக்கும் நடைமுறையை மாற்றி அமைத்தால் ‘ஆரோக்கியமான’ சமுதாயம் உருவாகும். வரும் ஆண்டில் முதல் வகுப்பில் தொடங்கினாலும் அடுத்த 12 ஆண்டுகளில் எல்லா பள்ளிகளுமே பொதுப் பள்ளிகளாக மாறி விடும். தமிழ்நாடு அரசு இதனைக் கொள்கை முடிவாக அறிவித்தால், பாலினப் பாகுபாடு இல்லாத பள்ளிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழ்நாடு மிளிரும். நாளடைவில் எல்லா மாநிலங்களிலும் ‘தமிழ்நாடு மாடல்’ பின்பற்றப்படும். அப்போது, இன்று நாம் காணும் அல்லது கேள்விப்படும் ‘பல பிரச்சினைகள்’ தானாக மறைந்து போகும். சரிதானே..?

Total Pageviews

Search This Blog