Breaking

Showing posts with label TNPSC தேர்வு. Show all posts
Showing posts with label TNPSC தேர்வு. Show all posts

Wednesday, July 06, 2022

July 06, 2022

மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு; உடனடியாக தேர்வு நடத்த அறிக்கை

மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல்வேறு நிலைகளில் 5,318 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை மின்சார வாரியம் ரத்து செய்திருக்கிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 1,300 கணக்கீட்டாளர்கள், 600 உதவி பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள், 2,900 கள உதவியாளர் என மொத்தம் 5,300 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான 4 அறிவிக்கைகள் கடந்த 2020&ஆம் ஆண்டு ஜனவரி 1, பிப்ரவரி 15, மார்ச் 19 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன. 18 உதவி கணக்கு அலுவலர் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்தேர்வுகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. கடைசியாக 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வுகளும் கொரோனா பரவல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டன.

விரைவில் இத்தேர்வுகள் நடத்தப்படும் என்று விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தான், இந்தத் தேர்வு அறிவிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆள்தேர்வு அறிவிக்கைகள் ரத்து செய்யப்படுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியிருக்கும் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆள்தேர்வுகள் அனைத்தும் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால், தங்களால் இனி ஆட்களை தேர்வு செய்ய முடியாது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியத்தின் இந்த நிலைப்பாடு மிகவும் தவறானது ஆகும். மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்கப் பட்டிருப்பது மிகவும் சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை தான். அதற்கான சட்டம் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதன்பின் பல நாட்கள் கழித்து தான் ஆளுனரின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு தான் பொதுத்துறை நிறுவனங்கள் புதிதாக ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிடும் அதிகாரத்தை இழக்கின்றன.

ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்ந்தெடுக்க உத்தேசித்திருந்த 5,318 பணிகளில் 5,300 பணிகளுக்கான அறிவிக்கைகள் 2020-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெளியிடப்பட்டவை. 18 பணிகளுக்கான அறிவிக்கை 2021 பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது ஆகும். அவற்றின்படி 5,318 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்த மின்சார வாரியத்திற்கு எந்த தடையும் கிடையாது. மின்வாரியப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் மின்வாரியத்தால் நடத்தப் படுவதை விட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுவது நேர்மையானதாகவும், வெளிப்படை தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், இந்த விசயத்தில் செய்யப்படும் காலதாமதத்தால் படித்த இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவராலும் ஈடுகட்ட முடியாது. மின்வாரியத் தேர்வுகள் குறித்த காலத்தில் நடத்தப்பட்டிருந்தால், 5300 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும். ஆனால், போட்டித்தேர்வுகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்படாததால் அதற்காக விண்ணப்பித்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடத்தவிருக்கும் போட்டித் தேர்வு விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. மின்வாரியத் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி நடத்துவதாக இருந்தால், அதற்கு குறைந்தது இன்னும் ஓராண்டு ஆகும். அதுவரை மின்வாரியப் பணிகளை எதிர்பார்த்து இருப்பவர்களின் மன உளைச்சல் தொடரும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே விண்ணப்பித்த அனைவரும் டி.என்.பி.எஸ்.சி-யிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அதிலும் சிக்கல்கள் உள்ளன. பெரும்பான்மையான மின்வாரியப் பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 30, 32, 35 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மின்வாரியம் அறிவித்தப் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், இந்த பணிகளுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மீண்டும் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் மூன்றில் ஒரு பங்கினர் அதிகபட்ச வயது வரம்பை கடந்து விடுவார்கள்.

அதனால், அவர்கள் மின்சார வாரியத்தில் பணியில் சேரும் வாய்ப்பை இழந்து விடுவர். இது சமூக அநீதியாகும். எனவே, தமிழ்நாடு மின்சார வாரியம் 5,318 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும். அதில் ஏதேனும் தடைகள் இருந்தால், மின்வாரியம் வெளியிட்ட அறிவிக்கைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு, பழைய விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வுகளை மட்டும் டி.என்.பி.எஸ்.சி மூலம் அடுத்த ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிவுகளை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

Monday, July 04, 2022

July 04, 2022

TNPSC தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு... முறையாகப் பின்பற்றப்படுகிறதா?

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் முறையில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவந்தது. அதன் விளைவாக, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

அதன்படி, அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால், அதை மட்டும் தமிழ்வழியில் படித்தால் போதுமானது என்று இருந்த காரணத்தால், அந்த இடஒதுக்கீட வாய்ப்பை ஆங்கில வழியில் படித்தவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற பிரச்னை எழுந்தது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு... முறையாகப் பின்பற்றப்படுகிறதா? இந்த நிலையில், 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு, தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று தமிழ் வழியில் படித்ததற்குரிய பி.எஸ்.டி.எம் சான்று வாங்கி சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன. அவர்கள், பள்ளிக் கல்வியையும், பட்டப்படிப்பையும் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி வாய்ப்பின் மூலமாக கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ் வழியில் படித்துவிட்டு, அதற்கான சான்று வாங்கியவர்கள்.

அந்தப் போக்கு தடுக்கப்பட வேண்டும் என்றும், ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீடு என்கிற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. எனவே, ‘தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஒரு பணிக்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டால், அந்த வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். பிளஸ் 2, பட்டப் படிப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டால் அந்தக் கல்வி முழுவதையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

இதை, டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைமுறையின் ஒவ்வொரு நிலையிலும் பின்பற்ற வேண்டும். தமிழ்வழி அல்லது எந்தப் பயிற்று மொழியில் ஒரு மாணவர் தேர்ச்சி பெற்றார் என்பதை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு கல்விச் சான்றுகளில் குறிப்பிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, முழுவதுமாக தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டைப் பெறும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசு முடிவுசெய்தது. அதற்கான சட்ட மசோதா, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் அன்றைய அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமாரால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 2020-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு, அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக கையெழுத்திடவில்லை. சுமார் ஒன்பது மாதங்கள் கழித்தே அவர் ஒப்புதல் வழங்கினார்.

இந்தச் சட்டத்தின்படி, பட்டப்படிப்பு மட்டுமின்றி 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு பட்டப்படிப்புடன் 10-ம், 12-ம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அதேபோல, 10-ம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் நிலவும் சமவாய்ப்பின்மையை நீக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த முறையில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்வழியில் படித்தவர்கள் அரசின் உதவித்தொகையைப் பெற்றிருப்பார்கள். எனவே, அந்த சான்றிதழைப் பெற்று இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி-யின் விளக்க ஆவணத்தில் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்று அளிக்கத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், முதல் பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் படித்துவிட்டு இரண்டாவது பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ்வழியில் படித்திருந்தாலும் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்தது. அதேபோல, ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையிலும், இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதில், பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, இளங்கலைப்பட்டத்தை தமிழில் படித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கப்பட்டிருக்கும் வழிகாட்டலுக்கும், நடைமுறைக்கும் வித்தியாசம் இருப்பதாக அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு படித்துவரும் தமிழ்வழியில் கல்வி பயின்ற இளைஞர்கள் தெரிவிக்கிறார்கள். ஏன் இந்தக் குழப்பம்? அரசு தான் பதில் சொல்ல வேண்டும்!

Total Pageviews

Search This Blog