Breaking

Showing posts with label மாணவர்களுக்கு தண்டனைகள். Show all posts
Showing posts with label மாணவர்களுக்கு தண்டனைகள். Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

`தவறு செய்யும் மாணவர்களுக்கு இந்த தண்டனைகளை கொடுங்க’- ஆசிரியர்களுக்கு அரசு கொடுத்த ஐடியாஸ்

`தவறு செய்யும் மாணவர்களுக்கு இந்த தண்டனைகளை கொடுங்க’- ஆசிரியர்களுக்கு அரசு கொடுத்த ஐடியாஸ்

தமிழகத்தில் அதிகரித்து வரும் சிறார் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முடிவடைவதென்பது, `இந்தக் காலத்து பிள்ளைகளை யாராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுக்கு ஏமாற்றமென்பதே வாழ்வில் இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அவசரம்தான். தவறு செய்தார்கள் என சிறு தண்டனை கொடுத்தாலும், மிக மோசமான முடிவுகளை அவர்கள் எடுத்துவிடுகின்றனர்’ என்ற ஒற்றை புள்ளியில்தான். இதை முன்னிறுத்தி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அணையம் பள்ளிக்கூடம் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளை, குறிப்பாக பள்ளி மாணவர்களை கையாளும் சில வழிமுறைகளை தமிழக அரசின் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்ட சிஇஓ-க்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் `பொது போக்குவரத்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தல், ஆசிரியர்களை அவமதித்தல், புகைப்பிடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், மற்ற குழந்தைகளை அடித்தல், ஆசிரியர்களை உடல் ரீதியாக பயன்படுத்துதல், சாதி மத பொருளாதார ரீதியாக மற்றவர்களிடம் பாகுபாடு பார்த்தல், புண்படுத்துதல் உட்பட குழந்தைகள் செய்யும் பெரும்பாலான தவறுகளை பட்டியலிட்டுக்கொள்ளவும். இத்தகைய குற்றங்களில் மாணவர்கள் ஈடுபட்டால், பள்ளி ஆலோசகர் முதலில் தக்க ஆலோசனை வழங்கவேண்டும். இதே தவறை 2 -வது மற்றும் 3-வது முறை செய்தால், ஆசிரியர்கள் கையாளவும். ஆசிரியர்கள் கையாள வேண்டிய ஒழுங்குமுறை நுட்பங்கள்: அம்மாணவர்,

* 5 திருக்குறளை படித்து பொருளோடு ஆசிரியர்களிடம் எழுதிக்காட்டவேண்டும்

* 2 நீதிக்கதைகளை பெற்றோரிடம் இருந்து கற்று, வகுப்பறையில் சொல்ல வேண்டும்

* 5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்துக்காட்ட வேண்டும்

* வகுப்பு மாணவர்களை ஒழுங்குப்படுத்த ஒரு வாரத்துக்கு வகுப்பின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்

* 5 வரலாற்று தலைவர்களைப்பற்றி அறிந்துக்கொண்டு வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.

* சிறந்த ஆளுமைகளின் உண்மைக்கதையை கற்றுக்கொண்டு வகுப்பறையில் மாணவர்களிடம் விளக்க வேண்டும்

* நல்ல பழக்க வழக்கங்கள் பற்றிய வரைபடம் எழுத வேண்டும்

* பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றிய வரைபடம் எழுதவேண்டும்

இவற்றுடன் 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம் வரைதல், காய்கறி தோட்டம் அமைத்தல், கைவினை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.
3-வது எச்சரிக்கையிலும் திருந்தாவிட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் இருந்து குழந்தைகள் நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை, ஆலோசனை மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் பிறகு 5-வது முறையாக தவறு செய்தால், சுற்றுச்சூழலின் மாற்றமும், நட்பு வட்டாரமும் குழந்தையை ஒழுங்குப்படுத்த உதவும் என்பதால், பள்ளி நிர்வாக குழு ஒப்புதலோடு அருகிலுள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
August 08, 2022

பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்தபடி நூதன தண்டனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசுப்பள்ளி மாணவர்களின் நடத்தையில் பல்வேறு எதிர்மறை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கற்றல் நடவடிக்கைகளில் இருந்து திசை திருப்பப்பட்டு, தவறான நடத்தை மற்றும் குறும்பு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆசிரியர்கள் முழுமையாக கவனிக்க முடியாத சூழல் உள்ளது. அதேசமயம் மாணவர்களிடம் கோபம், வன்முறை மற்றும் கவனம் ஈர்க்கும் முறைகள் அதிகமாக காணப்படுகின்றன. பள்ளி மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதுடன், ஆசிரியர்கள் அவமரியாதையாக நடத்தப்படுகின்றனர். இதுபோன்ற மாணவர்களை கவனமுடன் கையாள வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, நூதன தண்டனை அளிக்க பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், `பள்ளி மாணவர்கள் கற்றல் குறைபாடு உள்ள குழந்தையாக இருந்தால், சிறப்பு கல்வியாளரிடம் அனுப்பி குழந்தைக்கு உதவி செய்யலாம். தற்போதுள்ள குழந்தைகள் ஆசிரியர்களை அவமதித்தல், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், சக மாணவர்களை ராகிங் செய்து அடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல், பள்ளி சுவர்களில் தவறான வார்த்தை, படங்களை எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நேர்வுகளில் முதலில் பள்ளி ஆலோசகர் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே மாணவர் தொடர்ந்து தவறு செய்தால், திருக்குறளை படித்து பொருளுடன் எழுதுதல், நீதிக்கதை கூறுதல், செய்தி துணுக்குகளை படித்தல், வரலாற்று தலைவர்களை பற்றி எடுத்துரைத்தல், நல்ல பழக்க வழக்கங்கள், பாதுகாப்பு மற்றும் முதலுதவி, 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம் வரைதல், காய்கறி தோட்டம் அமைத்தல், கைவினை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம். அதன் பின்னரும் தவறு செய்யும் பட்சத்தில் குழந்தை நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கவும், தொடர்ந்து அருகில் உள்ள வேறு அரசுப்பள்ளிக்கு மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’என இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Total Pageviews

Search This Blog