Latest News
December 21, 2022
அரசுப்பள்ளி மாணவர்களின் உடல்நலன் பேண மதிய உணவுக்கு முன்னதாக ஒரு குட்டி பிரேக்!
தில்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணர்வகளின் உடல்நலனை பேணும் வகையில், மதிய உணவுக்கு முன்னதாக சிற்றுண்டி இடைவேளையை சேர்க்கக் பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநகரம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி,
மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்குவதற்காக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிறு சிற்றுண்டி இடைவேளையை சேர்க்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி பெற்றோர்களுக்கான ஆலோசனை அமர்வுகளையும் கல்வித்துறை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது!
இதற்காக, பள்ளி கால அட்டவணையில் 10 நிமிடம் ஒதுக்க வேண்டும் என்றும், இது மதிய உணவுக்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மூன்று உணவுத் தேர்வுகள் என சிற்றுண்டிகளின் வாராந்திர திட்டமிடலைப் பள்ளிகள் தயாரிக்க வேண்டும். அதில் பருவகால பழங்கள், முளைக்கட்டிய பயறுகள், சாலட், வறுத்த சன்னா, வேர்க்கடலை போன்ற உணவுப் பொருள்களைச் சேர்க்கலாம்.
சிற்றுண்டி இடைவேளைக்கு வாராந்திர திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு உணவுப் பொருளையாவது மாணவர்கள் கட்டாயம் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.
அதேசமயம் பரிந்துரைக்கப்பட்ட பொருள்கள் செலவு குறைந்ததாக இருக்க வேண்டும்.
இந்த திட்டமிடலைக் கண்காணிக்க தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். அதேபோன்று மாலை நேரத்தில் இயங்கும் பள்ளிகளில் அதிக ஊட்டச்சத்து கொண்ட சிற்றுண்டிகளுக்கு வாராந்திர திட்டமிடுதலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக பெற்றோர்களுடன் ஆசிரியர்கள் கலந்தாலோசிக்க வகுப்பு வாரியாக ஆலோசனை அமர்வுகளை நடத்தவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோன்று, மதிய உணவுக்கான மெனுவில் அதிக ஊட்டச்சத்து கொண்ட மாற்று உணவுகள் அறிமுகப்படுத்தப்படலாம்,
இந்த உத்திகள் அனைத்தும், மோசமான உடல்நிலை காரணமாகப் பள்ளிக்கு வராமல் தவிர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும்.
மேலும், மாணவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த ஊக்குவிக்கும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

