latest tamil news
April 12, 2022
பள்ளிக்கு ரூ.1.30 கோடியில் மேம்பாட்டு பணிகள், கூடுதல் வகுப்பறை
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் பேசுகையில்,‘ அண்ணாநகர் தொகுதியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலினால் நடத்தப்படும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவொரு வசதிகளும் இல்லை என்பதால், அந்த வசதிகளை செய்து தர வேண்டும்’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: 60 ஆண்டுகளுக்கு மேலாக சீதா கிங்ஸ்டன் என்ற அமைப்பு அந்த பள்ளியை நடத்தி வந்தது. அந்த பள்ளியின் இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடமாகும். அந்த பள்ளி வாடகையை சரிவர செலுத்தாததால், வாடகையை கட்ட சொல்லி அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. உடனே அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்கள். நீதிமன்றம், நீங்கள் அறநிலையத்துறைக்கு வாடகையை கட்டுங்கள். இல்லையென்றால் அந்த பள்ளியை அறநிலையத்துறையிடம் ஒப்படையுங்கள் என்று உத்தரவிட்டது. உடன் அந்த பள்ளியை அறநிலையத்துறை சுவாதீனம் செய்து, அங்கு பயிலும் 854 குழந்தைகள் வாழ்வாதாரம், படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காகவும், வறுமை கோட்டிற்கு கீழே இருக்கிற மக்களின் பிள்ளைகள் அங்கு படித்து வருதால் முதல்வரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்ற போது, அந்த பள்ளியை அறநிலையத்துறை ஏற்று நடத்த வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார்.
ஏற்கனவே, அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் பள்ளி கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்பட்டு வந்ததை, பாதியாக ரூ.5000 ஆக குறைக்கப்பட்டது. அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை, புத்தக பை, புத்தகங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவசமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவினையும் செயல்படுத்தியிருக்கிறோம். தற்போது ரூ.1.30 கோடி செலவில் அந்த பள்ளியில் மேம்பாட்டு பணிகள், கூடுதலாக வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த பள்ளியில் ஏற்கனவே பணிபுரிகின்ற 42 ஆசிரியர்களையும், 8 பிற பணியாளர்களையும் தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றுகிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.