Universities
March 28, 2022
ஒன்றிய பல்கலைக்கழகங்களை போல மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை
மாநில பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு விடுத்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒன்றிய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் அறிவித்தது. இந்த நிலையில் ஒன்றிய பல்கலைக்கழகங்களை போல மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக யுஜிசி செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் வெவ்வேறு நுழைவுத் தேர்வுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுவதும் இதனால் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த மாநில பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. நுழைவுத் தேர்வால் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை பெருமளவில் குறைந்து விடும் என தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்து வரும் நிலையில், பல்கலைக்கழக மானிய குழுவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.