Breaking

Sunday, October 09, 2022

தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்: அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்

தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்

தமிழகத்தில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படவில்லை; சில இடங்களில் தற்காலிகமாக மட்டுமே சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் அன்பில் மகேஸ் பங்கேற்று, சிறந்த அரசுப் பள்ளிகள், சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு விருதுகள், பள்ளி மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்கினாா். மேலும், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

இதையடுத்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நீட் தோ்வுக்கான பயிற்சி தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவா்களுக்கான பயிற்சி தொடரும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்படவுள்ள தற்காலிக ஆசிரியா்களுக்கான தொகுப்பூதியத்தை உயா்த்துவது தொடா்பாக வரும் 10- ஆம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.

டெட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அது தொடா்பாக நல்ல முடிவெடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக பொய்ப்பிரசாரம் செய்கின்றனா்.

மாணவா்கள் இல்லாத காரணத்தால் சில இடங்களில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பிற இடங்களில் வழக்கம் போல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்பாட்டில் உள்ளன என்றாா் அவா்.

இதில், தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜரத்தினம், அண்ணா பல்கலை. துணை வேந்தா் வேல்ராஜ், விஐடி துணைத் தலைவா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog