ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பு: ஆசிரியர் நலனுக்கு எதிரான அரசியல் சட்டப் பிரச்சினை - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையத்தின் அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 03, 2025

Comments:0

ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பு: ஆசிரியர் நலனுக்கு எதிரான அரசியல் சட்டப் பிரச்சினை - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையத்தின் அறிக்கை



📌📌📌📌📌📌📌📌

*ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பு: ஆசிரியர் நலனுக்கு எதிரான அரசியல் சட்டப் பிரச்சினை*

➖➖➖➖➖➖➖➖

*_தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையத்தின் அறிக்கை_*

➖➖➖➖➖➖➖➖

*சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு*

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அந்நாளைய அதிமுக அரசு தீவிர கவனம் செலுத்தியிருந்தால், ஆசிரியர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. அப்போது பதவி உயர்வுக்கு மட்டுமே TET கட்டாயம் என்ற உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இதனை விரிவாக்கி, பணியில் தொடர்வதற்கே TET தேவை என அறிவித்திருப்பது ஆசிரியர்களுக்கு நியாயமற்ற சுமையாக அமைந்துள்ளது. இது அவர்களின் நீண்டகால அனுபவத்தையும் தகுதிகளையும் புறக்கணிக்கும் செயலாகும்.

*சட்டரீதியான குறைபாடுகள்*

* RTE சட்டம், 2009 – பிரிவு 23(1), (2): ஆசிரியர்களின் குறைந்தபட்ச தகுதிகளை வரையறுக்கிறது. ஆனால், இச்சட்டம் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எழுத வேண்டும் என்று கட்டளையிடவில்லை.

* NCTE அறிவிப்பு (2011): புதிய நியமனங்களுக்கு மட்டுமே TET கட்டாயமாக்கப்பட்டது. இதனை 2011க்கு முன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்தேதியிட்டு (retrospectively) பயன்படுத்துவது சட்டபூர்வமற்றது மற்றும் நியாயமற்றது. *அரசியலமைப்பு மீறல்கள்*

இத்தீர்ப்பு இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் முக்கிய பிரிவுகளை மீறுவதாக அமைகிறது:

* பிரிவு 14 – சமத்துவ உரிமை: அனுபவமிக்க ஆசிரியர்களை புதியவர்களுடன் ஒப்பிடுவது சமத்துவத்திற்கு எதிரானது.

* பிரிவு 16 – பணி வாய்ப்பில் சமவாய்ப்பு: பணியில் உள்ளவர்களின் பதவி உயர்வு உரிமையைப் பறிப்பது அநியாயம்.

* பிரிவு 19(1)(g) – தொழில் சுதந்திரம்: பணியைத் தொடர தேர்வு திணிப்பது வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது.

* பிரிவு 300A – சொத்து உரிமை: நீண்டகால சேவையால் பெற்ற பணி உரிமையை இழக்கச் செய்கிறது.

* பிரிவு 309 – சேவை விதிகள்: முன்தேதியிட்ட விதிகள் மூலம் பணி பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.

*ஆசிரியர்களின் வாழ்வாதார அச்சுறுத்தல்*

நீண்ட ஆண்டுகள் முறையான கல்வித் தகுதியுடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களிடம், “TET தேர்ச்சி பெறுங்கள் அல்லது பணியை இழப்பீர்கள்” என்பது அவர்களின் பணி பாதுகாப்பையும் வாழ்வியல் உத்தரவாதத்தையும் கேலிக்கு உட்படுத்துவதாகும். இத்தீர்ப்பால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1,50,000 ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என்பது மிகுந்த கவலை அளிக்கிறது. *கல்விக் கொள்கையும் மாநில உரிமைகளும்*

கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைகள் மாநிலங்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் அப்போது பரிகாசிக்கப்பட்டனர். ஆனால், இன்று ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாநில அரசு சமூக நீதி அடிப்படையில் உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

*அரசின் பொறுப்பு*

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர் அமைப்புகளுடன் ஆலோசித்து, பணி தொடர்வதற்கும் பதவி உயர்வுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாத தெளிவான தீர்வை வகுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில அரசு ஆசிரியர்களின் நலனை முதன்மைப்படுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுதி*

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, ஆசிரியர் நலன், பணி பாதுகாப்பு, பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதுகாக்க அரசுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளது. NCTE-யின் அறிவிப்பாணைகளுக்கு உரிய சட்ட ஆலோசனைகளையும் நடைமுறைகளையும் வகுக்க எங்கள் அமைப்பு எப்போதும் தயாராக உள்ளது.

ஆசிரியர் நலனுக்காக எப்போதும் உறுதியுடன் பயணிக்கும் உன்னத இயக்கம்

➖➖➖➖➖➖➖➖

*Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்*

பொதுச் செயலாளர்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews