Breaking

Thursday, January 30, 2025

ஜாக்டோ - ஜியோ போராட்ட அறிவிப்பு. சமரசம் செய்ய அரசு தரப்பில் ரகசிய முயற்சி



ஜாக்டோ - ஜியோ போராட்ட அறிவிப்பு. சமரசம் செய்ய அரசு தரப்பில் ரகசிய முயற்சி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அவர்களை சமரசம் செய்வதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் துவங்கியுள்ளன.

'தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு, புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

'ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்த பின், அதை தமிழகத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

இதற்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரண் விடுப்பு நிலுவை தொகையும் வழங்கப்படவில்லை. உயர் கல்விக்கான ஊக்க ஊதியமும் நிறுத்தப்பட்டு உள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளனர்.


இதுதொடர்பாக, அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பொன்னிவளவன், பொன் செல்வராஜ், மயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிப்ரவரி, 4ம் தேதி திருச்சியில் உயர்மட்ட குழு கூட்டம், 6ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், அடுத்த மாதம் 14ம் தேதி மாலை நேர போராட்டம், 25ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜாக்டோ - ஜியோ போராட்ட அறிவிப்பால், அரசுக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது. எனவே, சுமூக பேச்சு வாயிலாக, போராட்ட அறிவிப்பை திரும்ப பெற வைக்க, அரசு தரப்பில் ரகசிய முயற்சிகள் துவங்கியுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog