மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும் தமிழக கல்விக் கொள்கை குழு தலைவர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 21, 2022

Comments:0

மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும் தமிழக கல்விக் கொள்கை குழு தலைவர் தகவல்

மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும் தமிழக கல்விக் கொள்கை குழு தலைவர் தகவல் - Tamil Nadu Education Policy Committee Chairman informs that good education policies of Central Government will be adopted

''மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும்,'' என, திருநெல்வேலியில் நடந்த தென் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மாநில கல்விக் கொள்கை உயர் மட்டக்குழு தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார். தமிழக கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை அமல்படுத்துவதற்காக நீதிபதி டி.முருகேசன் தலைமையில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் ஜூனில் அறிவித்தார். குழுவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 12 பேர் உள்ளனர்.

தென்மண்டல அளவில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் சவிதா, பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வு பெற்ற பேராசிரியர் ராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், யூனிசெப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்தினம், கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் பங்கேற்றனர்.

திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.முடிவில் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது: இதே போல ஏழு மண்டல கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். கல்வியின் தரம் எல்லா மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற பேசியவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

கூட்டங்கள் முடிந்ததும் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.பள்ளி மாணவர்களின் ஏற்றத் தாழ்வு, நிதி ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்கப்படும். கூட்டத்திற்கு மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனர். வரும் கூட்டங்களில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்வோம். கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் கருத்துக்களையும் கேட்போம். தேவைப்பட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கருத்து கேட்கப்படும்.

அதிக படிப்பு சுமையால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.மாநில கல்விக் கொள்கையில் தமிழக கலாசாரம், சமூகம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படும். மத்திய கல்விக் கொள்கையில் நல்ல கொள்கைகள் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வி பயிற்சியளிக்கப்படும்.

ஆசிரியர்களின் சம்பளம், வேலை தொடர்பான வழக்குகளில் இந்த குழு தலையிடாது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தரம் உயர்ந்துள்ளது. தரத்தை உயர்த்த இக்குழு பரிந்துரைக்கும்.

கல்வி கொள்கை குறித்த ஆலோசனைகளை stateeducation policy@gmail.com என மின்னஞ்சல் முகவரியிலும், 3வது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கும் அக்.,15க்குள் அனுப்பலாம் என்றார்.

ஆறு உறுப்பினர்கள் ஆப்சென்ட்

கல்விக் கொள்கை உயர் மட்ட குழுவில் உறுப்பினர்களான எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராமானுஜம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் ச.மாடசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews