Breaking

Monday, December 09, 2024

Government Employees' Union warns there is no other option but to fight



போராடுவதைத் தவிர வேறு வழியில்லை அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

''எட்டு முறை முதல்வரை சந்தித்தும் கோரிக்கைகள் நிறைவேறாததால், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வம் தெரிவித்ததாவது:

அரசு ஊழியர்களுக்கான சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு 2021 ல் காலவரையின்றி முடக்கப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள 9 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சரண்டர் விடுப்பு நிவாரணமாக இருந்தது.

அ.தி.மு.க., ஆட்சியில் ஓராண்டும், பின்னர் காலவரையின்றியும் முடக்கப்பட்டதால் இனி வழங்க இயலாது என தெரிகிறது.

காலியிடங்களை நிரப்புவதில் தாமத போக்கை அரசு கடைபிடிக்கிறது. தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக 'அவுட் சோர்ஸிங்' மூலம் ஊழியரை நியமிக்கின்றனர். இனி தனியார் முகமை மூலமே சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் நியமனம் என்பது அரசு கொள்கையாகி விட்டது. இது சமூகநீதிக் கொள்கைக்கு எதிரானது.

சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், 21 மாத கால நிலுவை ஊதியம், சாலைப் பணியாளர்களுக்கு 41 மாதங்களை பணிக்காலமாக அறிவிப்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சிக்கின்றனர். தற்போதைய முதல்வர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று நுாறு சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என உத்தரவாதம் அளித்தார். இதுவரை அவை நிறைவேறவில்லை.

வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றாது என்ற மனநிலைக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் வந்து விட்டனர். முதல்வரை எட்டு முறை சந்தித்து பேசி வலியுறுத்தியுள்ளோம். அதன்பின்னும் நிறைவேறாததால், சக்தி மிக்க போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. துாத்துக்குடியில் டிச.13, 14 ல் நடைபெற உள்ள மாநாடு திருப்பு முனை மாநாடாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog