Breaking

Wednesday, August 31, 2022

துணை வேந்தர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

''மாநில அரசின் கொள்கைகளை பின்பற்றியே, துணை வேந்தர்களும், பல்கலைகளும் செயல்பட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 22 பல்கலைகளின் துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கம், முதல்வர் தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. ரூ.3,000 கோடிமுதல்வர் பேசியதாவது:

தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 22 பல்கலைகள் செயல்படுகின்றன. இவற்றுக்காக அரசு ஆண்டுதோறும், 3,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம், 27.1 சதவீதம். அதில் தமிழகத்தின் பங்கு, 51.4 சதவீதம். தேசிய தரவரிசையில் தமிழக நிறுவனங்கள், 16 சதவீதம் இடம் பெற்றுள்ளன; இந்த நிலை மேலும் உயர வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற திறனை வளர்க்கும், ஒருங்கிணைந்த பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

இதற்கு ஏற்ற, ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.உலகத் தரத்துக்கு தமிழக பட்டப் படிப்புகளை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில், ஆராய்ச்சிகளை மேம்படுத்த ஆண்டுதோறும், 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை, மாணவர்கள், ஆசிரியர்களிடம் பெறப்படும்.

மேலும், 'முதல்வர் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம்' துவங்கப்படும். மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தி, இதற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு, பல்கலைகள் செயல்பட வேண்டும். அறிவியல் சிந்தனையுள்ள சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும், பல்கலைகள் உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணைய பரிந்துரைப்படி, துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். இது, மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்னை.எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில், பல்கலைகள் செயல்பட வேண்டும். துணை வேந்தர்களும் அவ்வாறே செயல்பட வேண்டும்.

கல்வியை அன்னியப்படுத்தும் அத்தனையையும் எதிர்க்க வேண்டும்.புதிய பாடங்கள்எனவே தான், 'நீட்' தேர்வு மட்டுமின்றி, புதிய தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கிறோம். மாநில கல்வி கொள்கை அமைக்க, குழு அமைத்துள்ளோம். கல்லுாரிகளில் புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள்; புதிய பட்டப் படிப்புகளை கொண்டு வாருங்கள், இந்த ஆட்சி காலத்தை உயர் கல்வியின் பொற்காலமாக திகழ வைப்பது துணை வேந்தர்களின் கடமை.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog