Breaking

Saturday, November 27, 2021

நீட் மசோதாவுக்கு உடனே ஆளுநர் ஒப்புதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் மசோதாவுக்கு உடனே ஆளுநர் ஒப்புதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வுக்கு விலக்க கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

நீட் மசோதாவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆளுநருக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு விரைவில் குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்றுத்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற கடந்த செப்டம்பர் 13ல் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் நேரில் சந்தித்து, நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ர் ஏ.கே ராஜன் அவர்களின் தலைமையில் குழு ஒன்றை முதலமைச்சர் அமைத்தார். இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்தும், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத் தீர ஆராய்ந்தும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநர்க்கு அனுப்பப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு , தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை முதலமைச்சர் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இச்சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog