Breaking

Friday, July 09, 2021

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை உரிய நேரத்தில் வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:


பல்வேறு அரசு துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை கண்டறிந்து விரைந்து நிரப்பிட வேண்டும். பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைகளை எவ்வித தொய்வுமின்றி உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் சென்று முதுகலை, ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தினை சீரமைத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டாக்களை வழங்கிட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்கள், பிற இனத்தவர்களிடம் இருந்தால் அதைக் கண்டறிந்து மீட்டு, ஆதிதிராவிடர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். வறிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog