நூலாக மலர்ந்த திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 08, 2019

Comments:0

நூலாக மலர்ந்த திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் தொல்லியல் சார்ந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து “தேடித்திரிவோம் வா” என்ற பெயரில் நூலாக மலர்ந்துள்ளது. தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வை மாணவர்களிடம் வளர்ப்பதற்காகவும், 26.08.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் துவக்கப்பட்டது. இந்த தொன்மை பாதுகாப்பு மையத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் ஊரின் வரலாற்றைத் தொகுத்து ஆவணப்படுத்த பள்ளி மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்து ஆர்வமுள்ள சிலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் தங்கள் ஊரின் பெயர்க்காரணம், அங்குள்ள குளம், குட்டம், கண்மாய், ஏந்தல் போன்ற நீர்நிலைகளின் பெயர்கள், அவை எப்பொழுது உருவாக்கப்பட்டன, நாட்டுப்புறப்பாடல்கள், கோயில்கள், தர்காக்கள், தேவாலயங்கள் போன்றவற்றின் வரலாறு, வழிபாட்டு முறைகள், கதைகள், பழங்கால நாணயங்கள் ஆகியவற்றை களஆய்வின் மூலமும்தொகுத்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் தாங்களே களஆய்வு மூலம் சேகரித்த தகவல்களைத் தொகுத்து அவற்றைத் தாங்களே தட்டச்சு செய்து, கட்டுரையாக எழுதி படங்களுடன் முழுவதும் வண்ணத்தில் ஒரு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் 12 மாணவ, மாணவிகளின் 14 கட்டுரைகளையும், தொன்மை பாதுகாப்பு மையத்தின் பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு எழுதிய 1 கட்டுரையையும் தொகுத்து மாணவர்களின் தேடலில் விளைந்த நூல் என்பதால் இதற்கு ‘தேடித்திரிவோம் வா’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளின் சுருக்கம்: மாணவி அபிநயா: திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் பலமுறை கொள்ளையடித்துச் சென்ற, யாராலும் பிடிக்கமுடியாத சங்கிலி என்ற திருடனை தனி ஒருவனாய் பிடித்து அடித்துக் கொன்ற முத்துவீரப்பன் என்ற மாவீரனைப் பாராட்டி சேதுபதி மன்னர் திருப்புல்லாணி கோயிலில் சிலை வைத்துள்ளார். இந்த வரலாற்றைத் தெரிந்து பின் கோயிலில் உள்ள அவரது சிலையை தேடிக் கண்டுபிடித்து தன் ஊருக்கு பெயர் வந்த காரணத்தையும் கண்டறிந்து முத்துவீரப்பன் – ஒரு மாவீரனின் வரலாறு என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதே மாணவி தனது குலதெய்வக் கோயிலான பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றிய வரலாற்றையும் வழிபடும் முறைகளையும் நேரில் ஆய்வு செய்து கோவிந்தன் கோயில் - வரலாறும் வழிபாடும் என்ற தலைப்பில் கட்டுரையாக்கியுள்ளார். மாணவி விசாலி: மருத்துவர்களாய் இருந்த தன் முன்னோர்கள் பயன்படுத்திய மருத்துவ, ஜோதிட ஓலைச்சுவடிகளை தேடி எடுத்தபோது நூறு ஆண்டுகளுக்கு முன்பே கருமாந்திரக் காரியத்திற்கு ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் இருந்ததைக் கண்டறிந்து எனது ஆலோசனையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் என கட்டுரையாக்கினார். அதே மாணவி திருப்புல்லாணியின் தொன்மையான நீர்நிலைகள் எனவும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மாணவி அபர்ணா: பொக்கனாரேந்தல் என்ற தன் ஊர் பெயருக்குக் காரணமான காட்டுப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் களஆய்வின்போது தலை உடைந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம், சங்கஞ்செடி என்ற மூலிகைச் செடி ஆகியவற்றைக் கண்டுபிடித்து பொக்கனாரேந்தல் வரலாற்றுச் சிறப்புகள் என்ற தலைப்பில் கட்டுரையாக்கியுள்ளார்.
மாணவி சினேகா: தாதனேந்தல் கிராமத்தில் இருந்த பல நூறு ஆண்டுகள் பழமையான மிஸ்வாக் எனும் உகாய் மரம், ஆலமரம், இராஜராஜசோழன் ஈழக்காசு, கும்மி, ஒயிலாட்டப் பாடல்களோடு தாதனேந்தல் வரலாற்றுச் சிறப்புகளும் கிராமத்துப் பாடல்களும் என்ற தலைப்பில் கட்டுரையாக்கியுள்ளார். மாணவி நஸ்ரியா பானு: திருப்புல்லாணியில் உள்ள சேதுபதிகளின் அரண்மனையுடன் சேர்த்துச் சொல்லப்படும் பல வாய்மொழிக் கதைகளில் ஆமினாவின் கதையும் ஒன்று அதை இம்மாணவி கண்டுபிடித்து கைக்கோளர்மடம் ஆமினாவின் கதை என எழுதிய கட்டுரை புதிய செய்தியைத் தந்தது. மாணவி மதுவாசுகி: பஞ்சந்தாங்கியில் உள்ள கட்டையத்தேவன் ஊரணி, கட்டையத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதியால் (கி.பி.1730 - கி.பி.1735) உருவாக்கப்பட்டதைக் கண்டுபிடித்து பஞ்சத்தைத் தாங்கிய பஞ்சந்தாங்கி என்ற தலைப்பிலான கட்டுரையை இம்மாணவி உருவாக்கியுள்ளார். மாணவர் ராஜபாண்டியன் திருப்புல்லாணியின் சிறப்புமிகு கோயில்கள், மாணவி அன்சியா பேகம் கோரைக்குட்டம் கிராமச் சிறப்புகள், ஹசினாபேகம் மற்றும் சில்மியா பானு ஆகியோர் இணைந்து மேலப்புதுக்குடி நயினார் அப்பா தர்ஹா வரலாறும் வழிபாடும் என்கிற தலைப்பிலும் இந்த நூலில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். புத்தக வெளியீடு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ராமநாதபுரம்- 623503 தொடர்புக்கு: 99449 78282
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews