தமிழில் அதிகமானோர் தோல்வி: தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் வேதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 09, 2019

தமிழில் அதிகமானோர் தோல்வி: தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் வேதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுவை மாநிலத்தில் தமிழ்ப் பாடத்தில் அதிகமானோர் தோல்வியைத் தழுவியுள்ளது தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை புதுவை மாநிலத்தில் உள்ள 302 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8,192 மாணவர்களும், 8,328 மாணவிகளும் என மொத்தம் 16,520 பேர் எழுதினர். ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி, 7,908 மாணவர்களும், 8,211 மாணவிகளும் என மொத்தம் 16,119 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தத் தேர்ச்சி விகிதம் 97.57 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட (94.37 சதவீதம்) 3.2 சதவீதம் அதிகமாகும். கணிதத்தில் 25 பேரும், அறிவியலில் 18 பேரும், சமூக அறிவியலில் 81 பேரும் 100 }க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
இந்த நிலையில், மாநிலத்தில் தமிழில் 332 பேரும், ஆங்கிலத்தில் 178 பேரும், கணிதத்தில் 266 பேரும், அறிவியலில் 55 பேரும், சமூக அறிவியலில் 240 பேரும் தேர்ச்சியடையவில்லை. இவற்றில், அதிகபட்சமாக தமிழிலும், குறைந்தபட்சமாக அறிவியலிலும் மாணவ, மாணவிகள் தோல்வியடைந்தனர். அரசுப் பள்ளிகளில் அதிகம்: தமிழ்ப் பாடத்தில் புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 160 பேரும், தனியார் பள்ளிகளில் 80 பேரும் என மொத்தம் 240 பேரும், காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளில் 68 பேரும், தனியார் பள்ளிகளில் 24 பேரும் என மொத்தம் 92 பேரும் தோல்வியடைந்தனர். தமிழை வளர்த்த பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்டோர் வாழ்ந்த புதுவையில், தற்போதும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தமிழை வளர்த்து வரும் வேளையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்ற பாடங்களை விட தமிழில் அதிகமான மாணவ, மாணவிகள் தோல்வியைத் தழுவியுள்ளது கல்வியாளர்கள், தமிழார்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழறிஞரும், பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி கூறியதாவது: பண்டைய காலத்திலிருந்து தமிழை வளர்த்த புதுவை மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளது வருத்தமளிக்கிறது. தமிழ் படித்தால் என்ன பயன் என்ற மனநிலை மாணவர்கள் மத்தியில் நிலவுவதே இதற்குக் காரணம். இதை மாற்ற, அரசு தமிழறிஞர்களை அழைத்துப் பேசி, மாணவர்களிடம் எளிமையான முறையில் தமிழைக் கொண்டு செல்வதற்கான பாடத் திட்டத்தை வகுக்க வேண்டும். தமிழைப் படித்து, தமிழால் உயர்ந்தோர் பலர் உள்ளனர். இதை மாணவர்களுக்கு உணர்த்திட ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, தமிழின் பெருமையையும், தொன்மையையும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர். புதுவை மாநில மாணவர்கள், பெற்றோர்கள் சங்கத் தலைவர் வை.பாலா கூறியதாவது: மாணவர்கள் தாய் மொழியில் புரிந்து படித்தால்தான், வாழ்க்கையில் உயர முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்து. எனவே, கல்வித் துறை உரிய கவனம் செலுத்தி, தமிழை வளர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பள்ளிதோறும் "வாசிப்புத் திருவிழா' இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பி.டி.ருத்ரகவுடு கூறியதாவது: மொழி புரியவில்லையெனில், அதைக் கற்பது கடினம். எனவே, தாய்மொழியான தமிழை நன்கு படிக்க மாணவர்களின் அடிப்படையான ஆரம்பக் கல்வி முதல் தமிழைப் புரிய வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். குறிப்பாக, ஆரம்பக் கல்வியைப் போதிக்கும் பள்ளிகளில் "வாசிப்பு திருவிழா' நடத்தி, தமிழை வளர்க்க உள்ளோம். குழந்தைகளிடம் நூலகங்களைப் பயன்படுத்த அறிவுறுத்த உள்ளோம். 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்தைப் போதிக்க சிறப்பு வகுப்புகளை எடுக்க உள்ளோம். மேலும், அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த தமிழாசிரியர்களையும் வரவழைத்து, கற்றல் - கற்பித்தல் பணிகளில் உள்ள பிரச்னைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, வருங்காலங்களில் தமிழில் தோல்வியடைபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்றார் அவர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews