Breaking

Saturday, August 07, 2021

முதுநிலை மாணவர் சேர்க்கை: திருவள்ளுவர் பல்கலை. அறிவிப்பு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம் மையம் மூலம் மாணவர் சேர்க்கை: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு ரத்து

விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் கல்வி மையத்தின் மூலம் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனுக் காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத் தில் விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ‘வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து,ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால், விழுப்புரத்தில் உள்ள மையத்தின் மூலம் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ‘சமீபத்தில் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவும், ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சட்டத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு முடிவு செய்யும்’ என்று கூறினார். அதுதொடர்பான அரசாணையையும் தாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர் சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், ‘தற்போதைய நிலையில், ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டம் அமலில் உள்ளதால், அதைப் பின்பற்ற வேண்டும். விழுப்புரத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பான திருவள்ளுவர் பல்கலைக்கழக அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ரத்து செய்யும்வரை அச்சட்டம் அமலில் இருக்கும் என்பதால், அச்சட்ட விதிகளையே பின்பற்ற வேண்டும். எனவே, விழுப்புரம் மையத்தின் மூலம் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரமில்லை. அந்த அறிவிப்பை ரத்து செய்கிறோம். மேலும், இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog