ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக் விவகார வழக்கு : நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 04, 2021

Comments:0

ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக் விவகார வழக்கு : நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த செப். 12ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) நடந்தது. ஆனால், இந்தத் தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் வெளியானது போன்ற முறைகேடுகள் நடந்த விவகாரத்தில் போலீசார் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், செப். 12ம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுத்தேர்வை நடத்தக்கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் மம்தா ஷர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘செப். 12ம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, தேர்வு மையங்களிலேயே விடை குறியீடுகள் கசிவானது போன்ற குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.பயிற்சி மையங்களில் முன்கூட்டியே நீட் தேர்வு வினாத்தாளை வழங்கி முறைகேடு நடந்துள்ளது. நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநில காவல் நிலையங்களில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘நீட் தேர்வை பல லட்சம் பேர் எழுதியுள்ளனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது. முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏஜென்ஜிகளை முதலில் அணுக வேண்டும். ஏற்கனவே நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிமன்றத்தின் நிற்காது என்பது வழக்கறிஞருக்கு தெரியாதா? எனவே, நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை மாணவர்களிடம் வழக்கறிஞர் வசூலிக்க கூடாது. அவர், தனது சொந்த பணத்தை அபராதமாக செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews