கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளி... கடன் நெருக்கடியால் ஆசிரியர் தம்பதி எடுத்த விபரீத முடிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 19, 2021

1 Comments

கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளி... கடன் நெருக்கடியால் ஆசிரியர் தம்பதி எடுத்த விபரீத முடிவு!

கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளி... கடன் நெருக்கடியால் ஆசிரியர் தம்பதி எடுத்த விபரீத முடிவு!

கொரோனா தொற்றுநோயால் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆசிரியர் தம்பதி ஒன்று தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தம்பதியினரின் வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் சில நாட்களாக வைரலாகி வருகிறது. வீடியோவில் இருக்கும் தம்பதியினரின் பெயர் கர்ணதி சுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி ரோகிணி. இந்த தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளாக கோயிலகுந்தலா பகுதியில் லைஃப் எனர்ஜி என்ற தனியார் ஆங்கில வழி பள்ளியை நடத்திவந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா தொற்றுநோய் இவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, இவர்கள் பள்ளியில் படித்து வந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி கட்டணத்தை செலுத்தமால் இருக்க, சுப்ரமணியம் தம்பதியினர் சிக்கலை சந்திக்க தொடங்கியுள்ளனர். பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த தம்பதியினர் சுமார் 1.5-2 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடன் மற்றும் அதற்கான வட்டி தவணையை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இதுபற்றிய கவலையில் இருந்த அவர்கள், தற்கொலை செய்ய முடிவெடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தங்களது காரில் இருந்தவாறே தம்பதியினர் இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விடைபெறுவதாக அழுதுகொண்டே கூறி வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் அதனை வலைதளங்களில் பதிவிட்டு பிறகு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயிலகுந்தலா காவல்துறை அதிகாரி நாராயண ரெட்டி இந்த தற்கொலை தொடர்பாக பேசுகையில், ``இந்த ஜோடிக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. பள்ளியை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் சுமார் 1.5 முதல் 2 கோடி வரை கடன் வாங்கியிருந்தனர். கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், கடன் கொடுத்தவர்கள் இவர்களை நெருக்க ஆரம்பித்துள்ளனர். இதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆகஸ்ட் 16 அன்று, கணவன் மனைவி இருவரும் ஆத்மகூரில் உள்ள ரோகிணியின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, மாலை வரை அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வழியில் கரிவேனாவில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நிறுத்தி தற்கொலைக்கு முன் வீடியோ பதிவு செய்து, அதை சுப்ரமணியம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குடும்பத்தினர் வீடியோவைப் பார்த்து அவர்களைத் தேடிச் சென்று தம்பதியினரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே இருவரும் உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

1 comment:

  1. பதிவு மூப்பில் பணி வழங்க வேண்டும் tet அறிவுப்பிற்கு முன்பாக உள்ளவர்களுக்கு.,மற்ற மாநிலம் கல்வி அறிவு குறைவு தமிழ்நாட்டோடு ஒப்பிடும் போது.இஙகு tet ஒன்று இருந்திருந்தால் நான் teacherக்கு படித்திருக்க மாட்டேன் இவ்வளவு கொடுத்து 78000.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews