பிறகென்ன தகவல் பெறும் உரிமை? | தகவல்பெறும் உரிமைச் சட்டம் குறித்த தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

பிறகென்ன தகவல் பெறும் உரிமை? | தகவல்பெறும் உரிமைச் சட்டம் குறித்த தலையங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சட்டங்கள் அவ்வப்போது நிறைவேற்றப்படாமல் இல்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், நீதித்துறையும் அவ்வப்போது சில உத்தரவுகளைப் பிறப்பித்து, அந்தச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றனர் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை எடுத்தியம்ப முடியும். அந்தப் பட்டியலில் விரைவிலேயே தகவல்பெறும் உரிமைச் சட்டமும் இணைந்துவிடும் என்று தோன்றுகிறது. நீதிமன்ற செயல்பாடுகள் தொடர்பான எந்தவொரு பிரச்னையிலும் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைவிட, உயர்நீதிமன்ற விதிமுறைகள்தான் முன்னுரிமை பெறும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்கள் கையில் மிக சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கும் தகவல்பெறும் உரிமைச் சட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத பின்னடைவு இது. தகவல் ஆணையர்கள் நியமனத்தில் மாற்றங்களைச் செய்து மத்திய அரசு ஏற்கெனவே அவர்களை வலுவிழக்கச் செய்திருக்கிறது. இப்போது தகவல்பெறும் உரிமைச் சட்டமே இந்தத் தீர்ப்பால் வலுவிழக்கக் கூடும். குஜராத் மாநில தலைமை தகவல் ஆணையருக்கும், குஜராத் உயர்நீதிமன்றத்துக்கும் இடையேயான பிரச்னையில்தான், உயர்நீதிமன்றத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஒரு குடிமகன், உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்து தகவல் பெறுவதற்கு, அந்தந்த உயர்நீதிமன்ற விதிகளின்படிதான் விண்ணப்பிக்க வேண்டுமே தவிர, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் தகவல் கோர முடியாது என்பதுதான் அந்தத் தீர்ப்பின் சாராம்சம். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இனிமேல் எல்லாத் துறைகளுமே அவரவர் விதிமுறையின் கீழ் தகவல் கோர வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பி தகவல்பெறும் உரிமைச் சட்டத்தை செயலிழக்கச் செய்துவிட முடியும். குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பான சில ஆவணங்களின் நகல்களை ஒருவர் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். உயர்நீதிமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகலைப் பெறுவதற்கு உயர்நீதிமன்ற விதிகளின்படி கட்டணம் செலுத்தி, அதற்கான நீதிமன்ற கட்டண முத்திரைத் தாளில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். குஜராத் உயர்நீதிமன்ற விதிகளின்படி, என்ன காரணத்துக்காக ஆவணங்களின் நகலைப் பெற விரும்புகிறார் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். வழக்கு விசாரணைக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் எந்தவோர்ஆவணமாக இருந்தாலும் அதில் தன்மறைப்புநிலை (பிரைவஸி) இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது எதற்காக ஒருவர் நகல் கோருகிறார் என்பதைத் தெரிவித்தால், தவறான அல்லது பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால் சுதாரித்துக் கொண்டுவிடுவார்கள். மக்கள் தொடர்பு அதிகாரியின் முடிவை எதிர்த்து தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர், குஜராத் உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமைப்பில் முறையிட்டார். அந்த அமைப்பும் உயர்நீதிமன்ற விதிமுறைகளைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்று கூறிவிட்டது. விண்ணப்பதாரர் அந்த முடிவை எதிர்த்து குஜராத் மாநில தகவல் ஆணையத்தில் முறையிட்டார். தகவல் ஆணையம், ஆவணங்களின் நகலை வழங்கும்படி குஜராத் உயர்நீதிமன்ற மக்கள் தொடர்பு அதிகாரிக்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி, தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, ஆவணங்களின் நகலை தகவல்பெறும் உரிமைச் சட்ட மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் அந்த உத்தரவு, தகவல்பெறும் உரிமைச் சட்டம் உயர்நீதிமன்ற விதிகளை கட்டுப்படுத்தும் என்று கருதிவிடக் கூடாது என்றும், அது குறித்து இறுதித் தீர்ப்பில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் உயர்நீதிமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி உயர்நீதிமன்றத்தை அணுகியபோது தகவல் ஆணையரின் உத்தரவை டிவிஷன் அமர்வு ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தில் எந்த ஆவணத்தைப் பெறுவதாக இருந்தாலும் அது உயர்நீதிமன்ற விதி களின்படிதான் கோரப்பட வேண்டுமே தவிர, தகவல்பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தவோர் ஆவணத்தைப் பெறுவதற்கும் காரணம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, உயர்நீதிமன்ற விதிகளுக்கும் தகவல்பெறும் உரிமைச் சட்ட விதிகளுக்கும் இடையே பிரச்னை எழுமானால், தகவல்பெறும் உரிமைச் சட்டம்தான் முன்னுரிமை பெற வேண்டும். ஏனென்றால், அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, என்பது மனுதாரரின் வாதம். உயர்நீதிமன்ற விதிமுறைகளின்படி ஆவணங்களைப் பெற வழியிருக்கும்போது, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கோரப்படத் தேவையில்லை என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடுகிறது. 36 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பு, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் பல்வேறு விதிமுறைகள் குறித்து விரிவாக அலசி இருப்பது என்னவோ உண்மை. ஆனால், வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதித்துறையின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதாக இருக்கிறதே தவிர, தகவல்பெறும் உரிமைச் சட்டத்துக்கு வலு சேர்ப்பதாக இல்லை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews