Breaking

Saturday, September 11, 2021

திருமணத் தாம்பூலமாக புத்தகங்கள் - பாராட்டுகளைப் பெறும் வாழப்பாடி மக்கள்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மரக்கன்றுகள், நல்ல புத்தகங்களை தாம்பூலமாக வழங்குவது அதிகரித்து வருகின்றன. இதற்குப் பல்வேறு தரப்பினர் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

திருமணங்கள் தோறும் மணமக்களை மனதார வாழ்த்த வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறுசுவை விருந்து உபசரித்தும், வருகைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வெற்றிலைப் பாக்கு, தேங்காய் மற்றும் பழத்துடன் தாம்பூலப்பை கொடுப்பதும் முன்னோர்கள் வழியாக இன்றளவும் மரபாகத் தொடர்ந்து வருகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அண்மைக் காலமாக நடந்தேறும் திருமணங்களில் வழக்கமான வெற்றிலைப் பாக்கு, தேங்காய் மற்றும் பழங்கள் கொண்ட தாம்பூலப்பை கொடுப்பதைத் தவிர்த்து வரும் மண வீட்டார், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகளையும், நுால்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் புத்தகங்களையும் தாம்பூலமாக வழங்குவது அதிகரித்துள்ளது. வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், உமா மகேஸ்வரி தம்பதியின் மகள் வித்யபாரதி திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் விந்தை மனிதர்கள், வியப்பூட்டும் வழிபாடுகள், பேசும் மெளனங்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தங்களை தாம்பூலமாக வழங்கப்பட்டன. வாழப்பாடியைச் சேர்ந்த பார்த்திபன்–சுசீந்திரா தம்பதியரின் மகள் ரஜினி திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும், நெல்லி, மாதுளை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு விதமான மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, வழக்கமான வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் கொடுத்து நன்றி தெரிவிப்பதற்கு மாற்றாக, மரக்கன்றுகள், நல்ல புத்தகங்களை தாம்பூலமாக வழங்கியதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog