Breaking

Wednesday, August 04, 2021

அரசுப்பள்ளிகளில் கலை பாடப் பிரிவிற்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமனம்?

அரசு பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், கலை பாடப்பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது ஏன் என கேள்விகள் எழுப்பியதோடு, கலை பாடப் பிரிவிற்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
தற்போது அரசு பள்ளிகளில் அறிவியல் பிரிவை காட்டிலும் கலை பாடப்பிரிவில் அதிகப்படியான மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இருப்பினும் கலை பாட பிரிவிற்கான நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இதனால் ஊதியம் வழங்க முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் அறிவியல் பாடப்பிரிவுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது.

நிரந்தர ஆசிரியர் இல்லாத காரணத்தால் மாணவர்கள் வேறு பள்ளியில் சென்று சேருவதை தடுக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தலைமையாசிரியர்களே கலை பாட பிரிவை உருவாக்கியுள்ளனர். தற்காலிக ஆசிரியர்களை நியமித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு பி.டி.ஏ. நிதியில் ஊதியம் வழங்கி வந்தனர். தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லும்போது இவர்களுக்கான ஊதியம் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. ஆனால் அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெறும் கலை பாட பிரிவிற்கு ஆசிரியர்களை நியமிக்க அரசு முன்வராதது ஏன் என தலைமையாசிரியர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் முந்தைய அரசு இதுகுறித்து நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாத நிலையில் தற்போது செயல்பட்டு வரும் அரசு இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டு கலை பாடப்பிரிவில் அதிக சேர்க்கை இருக்கும் பள்ளிகளுக்காவது முதற்கட்டமாக நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog