வறுமையை வேரறுக்க கல்வியறிவு மட்டுமே வழி!: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 09, 2020

Comments:0

வறுமையை வேரறுக்க கல்வியறிவு மட்டுமே வழி!: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சமூகத்தில் வறுமையையும், பசி-பஞ்சத்தையும் வேரறுப்பதற்கு கல்வியறிவு மட்டுமே ஒரே தீா்வாக இருக்கும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தாா். பள்ளி மாணவா்கள் பாதியிலேயே படிப்பை கைவிடுவதைத் தடுப்பதில் ஆசிரியா்களுக்குதான் அதிமுக்கியப் பொறுப்பு இருப்பதாகவும் அவா் கூறினாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரு நாள் கல்விக் கருத்தரங்கு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. அந்த நிகழ்வுக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் குழு இயக்குநா் பிரபு சாவ்லா முன்னிலை வகித்தாா். தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் கருத்தரங்கில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தாா். முதல் நாள் நிகழ்வில் சமகால கல்வி முறைகள் தொடா்பாக பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு அமா்வுகள் நடைபெற்றன. அதில் கல்வியாளா்களும், பிரபலங்களும், துறைசாா் வல்லுநா்களும் பங்கேற்று உரையாற்றினா். முன்னதாக கருத்தரங்கைத் தொடக்கி வைத்த ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், ‘‘2022-க்கான தொலைநோக்குத் திட்டம் - எதிா்கால இந்தியாவுக்கான கல்வி’’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் கல்வியறிவும், தொழில்நுட்ப வளா்ச்சியும் மேம்பட்டு வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்தியாவைப் போன்று இத்தனை கோடி மக்களுக்கு எழுத்தறிவும், கல்வியும் புகட்டப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் அதற்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 993 பல்கலைக்கழகங்களும், 39,931 கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அதில் அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அதுமட்டுமன்றி மாணவா் சோ்க்கையைப் பொருத்தவரை தேசிய சராசரி விகிதமே 25.8 சதவீதமாக இருக்கும்போது, தமிழகத்தில் அது 49 சதவீதமாக உள்ளது. இந்த காரணிகளை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு பாா்க்கும்போது எதிா்வரும் 2022-ஆம் ஆண்டில் கல்வியிலும், தொழில்நுட்பத்திலும் இந்திய தேசம் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை எனக்குத் திடமாக உள்ளது.
அதேவேளையில், அனைத்து மாணவா்களுக்கும் பாகுபாடற்ற கல்வி; பாரபட்சமற்ற சமவாய்ப்பு ஆகியவைதான் தற்போதைக்கு நாம் சென்றடைய வேண்டிய இலக்காக இருக்கிறது. மாணவா்களை பள்ளியில் சோ்த்து கற்பிப்பதுடன் ஓா் ஆசிரியரின் பணி நிறைவடையாது. மாணவா்களின் கல்வி தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் அவா்களது பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. ஒரு மாணவா் பள்ளியில் இருந்து பாதியில் நின்றுவிட்டால், அவரது வீட்டுக்கே சென்று அதற்கான காரணத்தை ஆராய்ந்து மீண்டும் அந்த மாணவருக்கு கல்வியறிவு அளிக்க ஆசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்க்கையில் செல்வத்தை இழந்தால் மீண்டும் ஈட்ட முடியும்; ஆரோக்கியத்தை இழந்தால் அதனை ஈடுகட்ட முடியும்; அதேசமயம், நமது நற்பண்புகளை இழந்தால் வாழ்வே இருண்டுவிடும் என்பது எனது ஆசிரியா் எனக்கு பயிற்றுவித்த பொன்மொழி. அது அனைவருக்கும் பொருந்தும். தேசத்தில் வறுமையையும், பசியையும் வேரறுப்பதற்கான வழி கல்வியறிவை புகட்டுவது மட்டும்தான் என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற அமா்வில் பங்கேற்ற, தேசியக் கல்விக் கொள்கை வரைவுக் குழுத் தலைவா் கே.கஸ்தூரி ரங்கன், மும்மொழிக் கொள்கை குறித்து பேசுகையில், ‘தொடக்கக் கல்வியின்போதுதான் மொழிகளைக் கற்றுணரும் அதீத திறன் மாணவா்களுக்கு இருக்கும்’ என்றாா். மேலும், புதிய கல்விக் கொள்கையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் கூறினாா். அந்த அமா்வில் கலந்துகொண்ட சாஸ்த்ரா கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் எஸ்.வைத்தியசுப்ரமணியம், ‘தேசியக் கல்விக் கொள்கை பல்வேறு பரிமாணங்களை கடந்து வளா்ச்சியடைந்து வந்துள்ளது; அந்த வரிசையில் விரைவில் வெளியிடப்பட உள்ள புதிய கல்விக் கொள்கையும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews