பள்ளிக்கல்வித் துறையின் புதிய வழிகாட்டுதல்கள்: வகுப்பறையில் 70% மாணவர் பங்கேற்பு கட்டாயம்!
"Release of New Curriculum Guidelines by the Department of School Education: Mandatory 70% Student Participation in Classroom Activities" பள்ளிக்கல்வித் துறையின் புதிய பாடத்திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு: வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர் 70% பங்கேற்பு அவசியம்
புதிய பாடத்திட்டத்தின்படி பேசுதல், கலந்துரையாடல் போன்ற வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர்களின் 70 சதவீத பங்கேற்பை உறுதிசெய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கெனவே 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களின்படி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 4 முதல் 8-ம் வகுப்புகளுக்கு 2027-28-ம் கல்வியாண்டிலும், 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு 2028-29-ம் கல்வியாண்டிலும் புதிய பாடநூல்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தின்படி வகுப்பறை செயல்பாடுகள், ஆசிரியர்கள் கையாளும் முறை, கல்வி அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பாடநூல்களில் உள்ள செயல்பாடு, பயிற்சி,விளையாட்டு, செயல்திட்டம் ஆகியவற்றில் கற்றல் விளைவுகளை அறிந்து ஆசிரியர்கள் வகுப்பறை செயல்பாடுகளை செயல்படுத்த வேண்டும்.
கலந்துரையாடல் போன்ற வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பு 70 சதவீதம் இருக்கவேண்டும். இதையெல்லாம் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல், புதிய பாடத்திட்டத்தின்படி திறன்களை மையமாகக் கொண்ட மதிப்பீட்டு முறை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. மனப்பாட முறையை பின்பற்றாமல் சிந்தித்து விடை அளிக்கும் வகையில் வினாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கற்றல் பயணம், நானே செய்வேன், திறனறி மதிப்பீடு ஆகிய 3 வகையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களை கையேட்டில் அவசியம் பகிர வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.