TET’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம் - டிஆர்பி மீது ஆசிரியர்கள் அதிருப்தி
பொது ‘டெட்’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: டிஆர்பி மீது ஆசிரியர்கள் அதிருப்தி
பொது ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடாமல் டிஆர்பி காலதாமதம் செய்து வருவதாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பி.எட் பட்டதாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு (‘டெட்’) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 தடவை கட்டாயம் ‘டெட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறையின்படி, மத்திய அரசு பள்ளிகளுக்கான ‘சி-டெட்’ தேர்வு ஆண்டுக்கு 2 தடவை திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் ‘டெட்’ தேர்வு நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியமோ (டிஆர்பி) இந்த விதிமுறையை இதுவரை எந்த ஆண்டிலும் அமல்படுத்தல்லை. ஆண்டுக்கு ஒரு ‘டெட்’ தேர்வு நடத்தப்பட்டாலே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கடைசியாக ‘டெட்’ தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, இந்த ஆண்டுக்கான முதலாவது பொது ‘டெட்’ தேர்வுக்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். 2-வது தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், முதலாவது தேர்வுக்கான அறிவிப்புகூட இன்னும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட் தேர்வு ஜூலை 4,5-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு பணியில் இல்லாத ஆசிரியர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது பள்ளிகளில் பணிபுரியாத இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் முடித்தவர்கள் பொது ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் முடித்தவர்கள் கூறும்போது, “என்சிடிஇ விதிமுறையின்படி, ‘சி-டெட்’ தேர்வு ஆண்டுக்கு 2 தடவை திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. ஆனால், டிஆர்பி மட்டும் ஆண்டுக்கு ஒரு டெட் தேர்வைகூட நடத்த காலதாமதம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் பொது ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும். அதேபோல் தேர்வு முடிவையும் விரைந்து வெளியிட வேண்டும்” என்றனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.