Breaking

Sunday, August 29, 2021

பள்ளிகள் திறப்பால் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கலா?

தில்லியில் பள்ளிகள் திறக்கப்படுவதால், அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்கள் மற்றும் ரேஷன் பொருள் விநியோக மையங்கள் செயல்படுவதில் சிக்கல் இருக்காது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்ப்படும் என அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

"நிறைய வகுப்புகள் உள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் ரேஷன் பொருள்கள் விநியோகம் தற்போது நடைபெற்று வரும் அதே பள்ளிகளில் தொடரும். முதல் கட்டமாக 4 வகுப்புகளின் மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வரவுள்ளதால், இடம் பெரிய பிரச்னையாக இருக்காது. மாணவர்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் அல்லாமல் தடுப்பூசி செலுத்துவதற்குத் தனியாக இடம் ஒதுக்கப்படும்.

தில்லியில் இன்று கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்கிறது. முன்பு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களே விரும்பவில்லை. ஆனால், தற்போது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என அவர்களே விரும்புகின்றனர். வகுப்பறை சூழலில் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்படும்."

பள்ளிகள் திறப்பு குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியது:

"பள்ளிகள் திறப்புக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். பள்ளிக்கு வரச் சொல்லி மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து இணையவழியில் பாடம் கற்றுக்கொள்ளும் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கொள்ளலாம்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog