Breaking

Sunday, August 08, 2021

வீதிகள் தோறும் பள்ளிகள் செய்வோம் மாணவரை தேடி செல்லும் ஆசிரியர்கள்

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், மணவாசி அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை தேடி சென்று வீதிகளை வகுப்பறையாக மாற்றி, பாடம் கற்று தருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. எனினும், தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில், ஆன்லைன் வகுப்பு நடத்தும் வசதிகள் இல்லாததால், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம், மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் வீடு தேடி சென்று, பாடம் நடத்தி வருகின்றனர்.

தலைமை ஆசிரியை தேன்மொழி கூறியதாவது: எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை, 179 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கல்வி தொலைக்காட்சி, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பாடங்கள் கற்று தரப்பட்டன.ஆயினும், மாணவ - மாணவியரின் கற்றல் திறனில் திருப்தி இல்லை. மற்ற ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினேன். இதன்படி, விடுமுறை தவிர மற்ற நாட்களில் ஒவ்வொரு பகுதிக்கும், நான் உட்பட ஐந்து ஆசிரியர்கள் சென்று, மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறோம். பள்ளிகளில் பாடம் எடுப்பதை போலவே, மாணவர்கள் அனைவரையும், அங்குள்ள கோவில், பொது இடங்களில் வரவழைத்து சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து, கைகளை சுத்தமாக கழுவி பாடம் நடத்தி வருகிறோம்.ஆக., 2 முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 150 மாணவ - மாணவியர் கலந்து கொள்கின்றனர். வரும், 9ல் இருந்து எல்.கே.ஜி., - யூ.கே.ஜி.,க்கும் பாடம் நடத்த இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இதுபோல, புனவாசிப்பட்டி அரசு துவக்கப் பள்ளி உதவி ஆசிரியர் கோபிநாத், வீடு தேடி சென்று பாடங்களை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog