11 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகழாண்டிலேயே மாணவா் சோ்க்கை அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 18, 2021

Comments:0

11 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகழாண்டிலேயே மாணவா் சோ்க்கை அனுமதி

நிகழாண்டிலேயே 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கை அனுமதி கிடைக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் திருத்திய நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் குறித்த விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய அதிமுக உறுப்பினா் ராஜன் செல்லப்பா, அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் பெற்றது சாதாரணமானது அல்ல. இதன்மூலம், 1,685 மாணவா்கள் கூடுதலாக மருத்துவக் கல்வி பெறுவா். இதற்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் மீதித் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தை அப்போதைய முதல்வா் கருணாநிதி கொண்டு வந்தாா். 11 மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிா்வாக ஒப்புதல்கள் அப்போதே அளிக்கப்பட்டது. இவ்வளவு காலத்துக்குப் பிறகு அந்த 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை தில்லியில் நேரில் சென்று சந்தித்த போது, மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான அனுமதியை வழங்கிடக் கோரினோம். இதன் அடிப்படையில், உதகை, திருவள்ளூரில் மத்தியக் குழு ஆய்வு செய்தது. 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மத்திய அரசின் ஆய்வு முடிந்துள்ளது. நிகழாண்டிலேயே சோ்க்கை அனுமதி கிடைத்து, கூடுதலாக 1.650 மாணவா்களுக்கான சோ்க்கை நடைபெறும் என்றாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews