பிளஸ் 2 வகுப்பில் கற்றல் சுமை குறையவில்லை: மாணவர்கள் மன உளைச்சல்; ஆசிரியர்கள் புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 30, 2021

Comments:0

பிளஸ் 2 வகுப்பில் கற்றல் சுமை குறையவில்லை: மாணவர்கள் மன உளைச்சல்; ஆசிரியர்கள் புகார்

பிளஸ் 2 பாடத்திட்ட குறைப்பால், கற்றல் சுமை குறைக்கப்படவில்லை என, அரசு பள்ளி ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கால், கடந்த மார்ச் முதல், பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளில், தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அரசு பள்ளிகளில் அனைவருக்கும் சாத்தியமாகவில்லை. இந்நிலையில், 35 சதவீதம் வரை, பாடத்திட்டம் குறைக்கப்பட்டு, கடந்த வாரம், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பிளஸ் 2 வகுப்பில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில், குளறுபடி உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: 'நீட்' தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனக்கூறி, மாற்றப்பட்ட பிளஸ் 2 பாடத்திட்டம், ஏற்கனவே மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தி வந்தது. தற்போது பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருந்தாலும், கற்றல், கற்பித்தலில் சுமை குறையவில்லை. குறிப்பாக, புத்தகத்தில் உள்ள எந்த பாடப்பகுதியும் தவிர்க்கப்படவில்லை. அதற்கு பதில், ஒவ்வொரு பாடத்தில் வரும் கிளை பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நீக்கப்பட்ட கிளை பகுதிகளையும் நடத்தினால் மட்டும், அப்பாடத்தை புரிந்து கொள்ள முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால், பாடப்புத்தகம் முழுதும் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்கனவே, விளையாட கூட அனுப்பாமல், வாரம் ஆறு நாள் வகுப்பு நடத்தி, மாணவர்களுக்கு சோர்வை உருவாக்கும் நிலை உள்ளது. இதில், 5 மாதங்களில் முழுமையாக பாடத்திட்டத்தை படிக்க வேண்டிய கட்டாயம், மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். கிளை பகுதிகளை நீக்கும் முறைக்கு பதில், குறிப்பிட்ட பாடப்பகுதிகளை தவிர்த்திருந்தால், சராசரி மாணவர்களுக்கு பயனாக இருந்திருக்கும்.'நீட்' தேர்வுக்கு தயாராகும், நன்கு படிக்கும் மாணவர்கள், எப்படியும் முழு புத்தகத்தையும் படித்தாக வேண்டும். இதனால், பாடப்பகுதி நீக்குதலை, சராசரி மாணவரின் கற்றல் நிலை கருதி, மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews