10-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையனிடம் திமுக மனு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 20, 2020

Comments:0

10-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையனிடம் திமுக மனு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையனிடம் திமுக மனு அளித்துள்ளது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மனு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமரிடமும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை மாணவர் நலன் கருதி ஒத்திவைக்க வேண்டும் என மனு அளித்தார்.
திமுக இளைஞரணி- மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:
“மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த 10 ஆம் வகுப்புத் தேர்வை கரோனா பரவல் அச்சம் காரணமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடத்துவது என அரசு முடிவு செய்தது. பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 10 ஆம் வகுப்புத் தேர்வை மேலும் தள்ளிவைக்க வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைவர் வலியுறுத்திக் கூறியிருந்தார். மேலும், ‘தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவியுள்ள சூழலில் தேர்வெழுதும் மனநிலையில் மாணவர்கள் இல்லை. மனதளவில் அவர்களைத் தயார்படுத்திய பிறகே தேர்வை நடத்தவேண்டும். பள்ளி திறக்கப்பட்டு இரு வாரங்கள் சென்ற பிறகு தேர்வை நடத்துவதே சரியான நடைமுறையாக இருக்கும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தன் முடிவில் உறுதியாக இருந்த பள்ளிக் கல்வித்துறை, தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டது.
இளைஞரணி-மாணவரணி கூட்டம்
இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு குறித்து விவாதிக்க திமுக இளைஞரணி-மாணவரணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் (18-05-2020) திங்கட்கிழமை மாலை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள இச்சூழலில் 10-ம் வகுப்புத் தேர்வை நடத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும், அதைத் தள்ளிவைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு அணிகளின் அமைப்பாளர்களும் விவாதித்தனர். அப்போது விவாதிக்கப்பட்ட பயனுள்ள பல தகவல்களைத் தொகுத்து தேர்வைத் தள்ளி வைக்கக்கோரி அரசு செயலருக்கும், மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மனுக்களாகத் தருவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஏன் இந்த அவசரம்?
இந்தநிலையில் 10-ம் வகுப்புத் தேர்வை 15 நாட்கள் தள்ளி, ஜூன் 15-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடத்தப்போவதாக அரசு அறிவித்து புதிய தேர்வு அட்டவணையையும் நேற்று வெளியிட்டது. உயர் கல்வித்துறை தேர்வுகள் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கும்போது 10 ஆம் வகுப்புத் தேர்வுக்கு மட்டும் ஏன் இத்தனை அவசரம்? எதற்கெடுத்தாலும் மத்திய அரசைப் பின்பற்றும் இந்த அரசு, தன் CBSE பள்ளிகளுக்கான தேர்வுகளை ஜூலையில் நடத்தும் மத்திய அரசின் முடிவை மட்டும் பின்பற்றாதது ஏன்? பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ஏன் இந்த அவசரம்? இதுபோன்று பல கேள்விகள் எழுந்தாலும் 15 நாட்கள் தேர்வைத் தள்ளி வைக்கும் அரசின் இம்முடிவை இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட திமுக மனதார வரவேற்கிறது. அதேவேளை, தேர்வெழுத வரும் மாணவர்களை கவனமாகக் கையாண்டு கரோனா தொற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றினால் மட்டுமே தேர்வு விஷயத்தில் அரசின் பணி முழுமையடையும்.
கோரிக்கை மனு

அந்தவகையில் அரசுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இளைஞரணி-மாணவரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகளை இந்த மனுவில் தொகுத்து அளித்துள்ளோம்.
1. கரோனா நோய்த் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
2. ஊரடங்கு இன்னமும் விலக்கிக்கொள்ளப்படாது நான்காம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. 12 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.
4. நோய்த்தொற்று நீங்காத நிலையில் 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் நோய் தாக்கும் அபாயத்திற்குள்ளாகின்றனர்.
5. இதன் காரணமாகப் பெற்றோர் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
6. பொதுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்படாத நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், இதரப் பணியாளர்களும் தேர்வு மையங்களுக்கு செல்வதில் இன்னலுக்குள்ளாவார்கள்.
7. குறிப்பாக மலைப் பகுதிகளில் வாழும் மாணவர்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்படும்.
8. அனைத்து தேர்வர்களுக்கும் வாகன வசதி உறுதி செய்யப்படவேண்டும். அப்படி ஏற்பாடு செய்யப்படும் வாகனங்கள் தனிமனித இடைவெளியுடன் அமரும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
9. ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் என்றால் ஏறத்தாழ 9.5 லட்சம் பேரை அமரச் செய்யும் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, அது உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும்.
10. விடுதிகளில் தங்கிப் படித்த மாணவர்களுக்குத் தங்குமிடம், உணவு குறித்த ஏற்பாடுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவை பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியவை. எனவே இதன் மீது அரசு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11. ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வழங்க அரசிடம் போதுமான ‘தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE)’ இருக்கிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
12. ஏதேனும் மாணவர்களுக்குத் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படவேண்டும்.
13. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தங்கள் பள்ளி இருக்கும் இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்ற விவரம் அரசிடம் இல்லை. எனவே இந்த விவரம் உடனடியாக சேகரிக்கப்பட வேண்டும்.
14. ஊரடங்கு காலத்தில் இவர்களில் பெரும்பான்மையோர் மின் அனுமதிச் சீட்டு (E-Pass) பெற்று தேர்வு மையங்களுக்குத் திரும்ப முடியாமல் தவிக்க நேரிடும். அதைத் தவிர்க்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?
15. பல பள்ளி வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான இருப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ள சூழலில் அங்கே மாணவர்களைத் தேர்வு எழுதச் செய்வது நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.
16. திருமண மண்டபங்கள் பாதுகாப்பனவையல்ல. நோய்த் தொற்றைப் பரப்பக்கூடும், அதனால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
17. கட்டுப்பாட்டு மண்டலத்திலுள்ள (Containment Zone) மாணவர்களின் நிலை என்ன? அங்கே எப்படித் தேர்வு எழுத முடியும் என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை.
18. கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்களுக்கு இந்தப் பொதுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுமா?
19. கரோனா சூழலில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்கள் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியாது. அவர்களை அரசு மனதளவில் எப்படி தயார்படுத்தப் போகிறது? இதற்கென ஆற்றுப்படுத்துதல் (Counselling) வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன்பிறகே தேர்வுகள் நடத்தப்படவேண்டும்.
20. நோய்த்தொற்றின் அபாயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு பள்ளிகள் திறந்த பின்னர் அவகாசம் அளித்து மாணவர்கள் தங்கள் பாடங்களை நல்ல முறையில் திருப்புதல் செய்வதற்கு வாய்ப்பளித்த பின்னரே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை. ஆனால் தேர்வுக்கு முன் மாணவர்கள் திருப்புதல் செய்துள்ளார்களா இல்லையா என்பதை ஆசிரியர்கள் எப்படி கவனிக்க முடியும், -அதற்கு ஏதேனும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரங்கள் தேவை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் கோரிக்கைகளையும் மனதில்கொண்டு தேர்வெழுத வரும் மாணவர்களைக் கவனமுடன் கையாண்டு நோய்த்தொற்றிலிருந்து அவர்களைக் காத்திடவும், கல்வியில் அவர்கள் உயர்ந்திடவும் ஆதரவளித்திட வேண்டுமாய் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் உதய நிதி ஸ்டாலின் கூறியதாவது: “கரோனா பாதிப்பு குறைந்தபின் தேர்வு நடத்த வேண்டும் என அமைச்சரிடம் தெரிவித்தோம். அவர் நீங்கள் போட்ட தீர்மானம் குறித்த செய்தியைப் பார்த்தேன். இன்னும் இரண்டு மூன்று நாளில் ஓர் அறிவிப்பு வரும் எனத் தெரிவித்தார். கரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை . கேரளாவில் தொற்று குறைந்துள்ளது. அங்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தொற்று குறையவில்லை. சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து அமைச்சரிடம் விரிவாகப் பேசினோம். 9.5 லட்சம் மாணவர்கள் உள்ளனர். ஆசிரியர்கள் 1.5 லட்சம் பேர் உள்ளனர். தேர்வு நடத்தும் இடத்தில் 10 பேரை ஒரு அறையில் அமர்த்துவோம் என்கின்றனர். அப்படியானால் லட்சக்கணக்கான மாணவர்களுக்குத் தேர்வு எழுதும் மையம் எப்படி அமைப்பார்கள் போன்ற கேள்விகள் எல்லாம் உள்ளன. தேர்வு முக்கியம் என்பதைவிட உயிர் முக்கியம் அல்லவா?” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews