Breaking

Tuesday, November 09, 2021

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு முதல்வர், பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கான முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணி நியமனத்துக்காக அறிவிக்கப்பட்ட தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கான முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணி நியமனம் தொடர்பாக தற்காலிக விதிகளை வகுத்து கடந்த ஜூலை 27ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதில், இப்பதவிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ இளங்கலை படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ரத்து செய்யக் கோரி அகில இந்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பிலும், ஒரு அரசு மருத்துவர், மருத்துவ மேற்படிப்பு மருத்துவர் ஒருவர் என 3 பேர் சார்பில் தனித்தனியாக 3 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், 2018ம் ஆண்டுக்கு பின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் உள்ளனர்.

பலர் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் பணியாற்றுகிறார்கள். இந்த தற்காலிக விதிகள், ஆசிரியர் பணிக்கு மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக உள்ளது. எனவே, இந்த விதிகளின் அடிப்படையில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வரை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 10ம் தேதிக்குள் (நாளை) அரசின் விளக்கத்தை தெரிவிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்கியதுடன் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர். பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனமும் மேற்கொள்ளக் கூடாது அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு முதல்வர், பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog