9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 07, 2021

Comments:0

9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

ஆக.16 முதல் மருத்துவக் கல்லூரிகள் செயல்படும்

* வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை

* ஆக.23 வரை ஊரடங்கு நீட்டிப்பு * முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுதினம் (திங்கள்) காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9ம் தேதி (திங்கள்) காலை 6 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய் தொற்று பரவல், அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளுடன் வருகிற 23ம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் கூட்டம் அதிகமாக கூடக்கூடிய நிகழ்வுகள் மற்றும் சந்தை பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.

மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.

பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி கல்வி துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ம் தேதியில் இருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிடும். மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவ பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

* விதிமுறைகளை பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்: * நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தொடர்புடைய துறைகளால் கண்டிப்பாக அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.

* கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இறைச்சி, மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க, திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து கடைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews