உயர்கல்வி ஆணையக் குழு வரைவு மசோதா: ஜூலை 7-க்குள் கருத்து தெரிவிக்கப்படும்; அமைச்சர் கே.பி.அன்பழகன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 05, 2018

Comments:0

உயர்கல்வி ஆணையக் குழு வரைவு மசோதா: ஜூலை 7-க்குள் கருத்து தெரிவிக்கப்படும்; அமைச்சர் கே.பி.அன்பழகன்


உயர் கல்வி ஆணையக் குழு வரைவு மசோதா தொடர்பாக தமிழகத்தின் கருத்துகள் வரும் 7-ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக, உயர்கல்வி ஆணையக் குழுவை அமைக்கும் மத்திய அரசின் முயற்சி தொடர்பாக சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பி பேசியதாவது:-

பல்கலைக்கழக மானியக் குழுவை (யு.ஜி.சி.) ஒழித்து விட்டு, உயர் கல்வி ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆணையம் என்பது மாநில உரிமைகளுக்கும், மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்துக்கும் எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கப் போகிறது என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கல்அதிகாரம் இல்லை: புதிய உயர் கல்வி ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனைக் குழுவில் மாநிலத்தின் பிரதிநிதியும் இருப்பார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், உயர்
கல்வி தொடர்பாக மாநிலங்களுக்கு பல்கலைக்கழக மானியமாக நிதி ஒதுக்கக்கூடிய அதிகாரம் இந்த உயர் கல்வி ஆணையத்திடம் இல்லை.

மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்: ஏற்கெனவே பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை இரண்டாம் தரத்தில் வைத்துப் பார்க்கக்கூடிய வேறுபாட்டோடு வினோதமான அணுகுமுறையை மத்திய அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
Kaninikkalvi.blogspot.com 
பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக அமையக்கூடிய உயர்கல்வி ஆணையத்திடம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டால், பல்கலைக்கழக மானியக்குழு உதவியோடு நடைபெறக்கூடிய கல்வித் திட்டங்கள், கிடைக்கப்பெறும் மானியங்கள், ஆராய்ச்சி மாணவர்களுடைய நிலை என்பது கேள்விக்குறியாக அமைந்துவிடும்.

எனவே, இதற்கு எத்தகைய நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது, எடுக்கப் போகிறது என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸம் அதே பிரச்னையை எழுப்பினார்.

இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பதில்:-பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக, தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஜூன் 27-இல் இதற்கான வரைவு சட்ட மசோதா தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், மாநிலங்கள் தங்களது கருத்துகளை ஜூலை 7-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

துணைவேந்தர்களிடம் கருத்து கேட்பு: இது தொடர்பாக தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. மேலும், மாநிலத்திலுள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறோம். இந்த கருத்துகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். அதன் பின், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு கருத்துகள் அனுப்பி வைக்கப்படும்.
Kaninikkalvi.blogspot.com 

பல்கலைக்கழக மானியக் குழு அமைப்பின் மூலமாக நாம் பெற்று வந்த உரிமைகள் பறி போகாத அளவுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் அறிக்கை, வரும் 7-ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும். தமிழகத்தின் உரிமைகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் அன்பழகன்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews