‘புளூ வேல்’ விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்ற 10–ம் வகுப்பு மாணவன்
‘புளூ வேல்’ விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்ற ஜெய்ப்பூரை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவன், மும்பையில் பத்திரமாக மீட்கப்பட்டான்.
நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படும் வார்த்தை ‘புளூ வேல்’. செல்போனில் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் விளையாடப்படும் இந்த எமகாத விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலைவைக்கிறது. மொத்தம் 50 நாட்கள் விளையாடப்படும் இந்த புளூ வேல் கேமில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலக்கு கொடுக்கப்படும்.
முதலில் எளிதான இலக்குகள் தரப்பட்டு, 50–வது நாளில் ‘தற்கொலை செய்துகொள்’ என்று உத்தரவு வரும். இதற்கு அடிமையான நபர்கள், வேறுவழியின்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்றோருக்கு தெரியாமல் புளூவேல் கேம் விளையாடி வந்த 10–ம் வகுப்பு மாணவன், கடந்த திங்கட்கிழமை திடீரென மாயமானான். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உள்ளூர் போலீசில் புகார் செய்தனர். சிறுவனின் செல்போன் எண்ணை வைத்து மேற்கொண்ட விசாரணையில், அவன் மும்பை சர்ச்கேட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக மும்பை வந்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு அவனை பத்திரமாக மீட்டனர். அவன் வசம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், புளூவேல் விளையாட்டின் இறுதிகட்டத்தை தான் எட்டியதாகவும், அதன் வலியுறுத்தலுக்கு இணங்க கத்தியுடன் ரெயிலில் மும்பை வந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததாகவும் குண்டை தூக்கிப்போட்டான்.
போலீசார் அவனுக்கு புத்திமதி கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.