பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட 10 கிலோ வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் தலைமை காவலர் ஓடினார். அவரது துணிச்சலான செயலால் 400 குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ளது சிடோரா கிராமம். இங்குள்ள பள்ளி ஒன்றில் 10 கிலோ வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டிருந்தது கடந்த வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் போலீஸார் விரைந்து சென்றனர். அங்கு வெடிகுண்டை கண்டுபிடித்தவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது சிறிதும் தாமதிக்காமல் தலைமை காவலர் அபிஷேக் படேல், வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். இதுகுறித்து அபிஷேக் கூறும்போது, ‘‘பள்ளி மாணவர்களிடம் இருந்து வெடிகுண்டை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அப்போது எனக்கு இருந்தது.kaninikkalvi.blogspot.in அதேநேரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தும் ஒதுக்குப்புறமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்’’ என்றார்.
பள்ளியில் வெடிகுண்டுஉள்ள தகவல் பரவியதும் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர். ஆனால், படேல் வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஒடுவதை யாரும் கவனிக்கவில்லை. ஒருவர் மட்டும் அதை பார்த்து விட்டு வீடியோ எடுத்துள்ளார். 12 வினாடி மட்டுமே உள்ள அந்த வீடியோ காட்சிகள் இப்போது வைரலாகி உள்ளது.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட போது பள்ளியில் 400 மாணவர்கள் இருந்துள்ளனர். இதுகுறித்து மூத்த ஆசிரியர் அஜய் குமார் கூறும்போது, ‘‘போலீஸாரின் அறிவுரைப்படி பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களை உடனடியாக வெளியில் அனுப்பினோம்’’ என்றார்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பின்னர் பாதுகாப்பான இடத்தில் அந்த வெடிகுண்டை வைத்துள்ளார் படேல். இது குறித்து ராணுவத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த குண்டு வெடித்திருந்தால் 500 மீட்டர் தூரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், படேலின் துணிச்சலான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் ஐஜி சாகர் சதீஷ் சக்சேனா கூறும்போது, ‘‘கிராமத்துக்கு அருகில் ராணுவ துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. ஆனால், இந்த குண்டு எப்படி பள்ளிக்கு வந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். எனினும், தலைமை காவலரின் துணிச்சலான செயலை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கப்படும்’’ என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.