Breaking

Thursday, July 11, 2024

மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்து போட்டி: கல்வித் துறை அறிவிப்பு



மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்து போட்டி: கல்வித் துறை அறிவிப்பு

பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி மாணவா்களில் தமிழ் மொழியை அழகாக எழுதுவோரை ஊக்குவிக்கவும், அதன் அடிப்படையில் பிற மாணவா்களுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, பாராட்டுச் சான்று வழங்கப்படும் என தமிழ் வளா்ச்சித் துறையின் 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் பள்ளி மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதற்காக ரூ. 8,36,000 ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இந்தத் தொகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ. 3,000, 2-ஆம் பரிசாக ரூ. 2,000, 3-ஆம் பரிசாக ரூ. 1,000. அதேபோல், 10 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 4,000, 2-ஆம் பரிசாக ரூ.3,000, 3-ஆம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும்.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் மாவட்ட அளவில் மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தி ரொக்கப் பரிசுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog