Breaking

Saturday, September 24, 2022

This is your place: teachers make no mistake! - இது உங்கள் இடம்: ஆசிரியர்களே தப்பு செய்யாதீங்க!

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்

ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதிகள் இல்லையடி பாப்பா... குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்...' என்று பாடியுள்ளார் மகாகவி பாரதியார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில், அங்கு படிக்கும், 40 மாணவர்களுக்கும், அப்பகுதி யில் உள்ள மகளிர் பள்ளியில் படிக்கும், 45 மாணவியருக்கும், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அங்கு நடந்த சம்பவத்தை நினைத்தால் நெஞ்சு எரிகிறது.

அதாவது, மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில், எம்.பி.சி., - பி.சி., மற்றும் எஸ்.சி., என, சாக்பீசில் எழுதப்பட்டிருந்ததுடன், எஸ்.சி., பிரிவை சேர்ந்த மாணவ - மாணவியருக்கான சைக்கிள்கள் தனியாக பிரித்து வைக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளன.

சைக்கிள்களின் இருக்கைகளில், சாக்பீசால் ஜாதி வாரியாக பிரித்து எழுதியதே தவறு. அப்படிப்பட்ட நிலையில், எஸ்.சி., பிரிவு மாணவ - மாணவியருக்கான சைக்கிள்களை தனியாக நிறுத்தி வைத்து வழங்கியது, அதை விட பெரிய தவறாகும். புத்திசாலித்தனமாக வேலை செய்கிறோம் என்று நினைத்து, இப்படிப்பட்ட முட்டாள்தனமான வேலையை ஆசிரியர்கள் செய்திருக்கின்றனர்.

இங்கு நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில், பர்கூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும் பங்கேற்றுஉள்ளார். அவராவது, மாணவர்களை பிரித்துக் காட்டிய, ஆசிரியர்களின் செயலை கண்டித்திருக்க வேண்டும்; அதுவுமில்லை.

ஆசிரியர்கள், இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்தும் போது, யாருடைய மனதையும் புண்படுத்தாமலும், ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வு பார்க்காமலும், அனைத்து மாணவர்களும் சமமானோர் என்ற ரீதியில், தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்பதே, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு. ஆசிரியர்களே... இனியும் இதுபோன்ற தப்பை செய்யாதீங்க!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog