Breaking

Monday, August 02, 2021

கல்வித்துறை பயன்பாட்டுக்கு கலைஞர் டிவிக்களை வழங்க முடிவு

தமிழகத்தில் கடந்த 2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது பொதுமக்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதேபோல் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் பொதுமக்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கடலூர் குண்டுசாலை, வெளிச்செம்மண்டலம் உள்ளிட்ட இடங்களில் பயனாளிகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கியபோது தேர்தல் அறிவிப்பு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அந்த டிவிக்கள் சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து 2011 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததால் அந்த டிவிக்கள் பயனாளிகளுக்கு கொடுக்கப்படாமல் வீணடிக்கப்பட்டது. பலமுறை பொதுமக்கள் வலியுறுத்திய போதிலும் வழங்கப்படவில்லை. கல்வித்துறை உள்ளிட்ட பயன்பாட்டுக்கு இவற்றை வழங்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரியும் அப்போதைய அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் 2 ஆயிரம் டிவிக்கள் வீணானது. அதேநேரத்தில் சம்பந்தப்பட்ட சமுதாயக் கூடத்தையும் திறக்கவில்லை. இதற்கிடையே தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பயன்படுத்தும் நிலையில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளை பள்ளிகள் மற்றும் கல்வித்துறை பயன்பாட்டுக்கு வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் சமுதாய நலக்கூடத்தையும் சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் முன்னிலையில் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன. அவை கடலூர் டவுன்ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டு பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog