Breaking

Saturday, August 21, 2021

செப். 15க்குப் பின் முழுமையாக பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை : தமிழக அரசு

"தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், செப். 15க்குப் பிறகு மழலையர் வகுப்புகள் முதல் முழுமையாக பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தையடுத்து, தமிழகத்தில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊரடங்கு மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த் தொற்றின் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், கரோனா பரவல் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. முன்பே அறிவித்தவாறு இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். உயர் வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50% பார்வையாளர்களுடன் ஆகஸ்ட் 23 முதல் திரையரங்குகள் இயக்க அனுமதிக்கப்படும். என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. முழுமையான விவரம்

கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும், செயல்பாடுகளும் ஆகஸ்ட் 23 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் அல்லது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog