அண்ணா பல்கலை பிரிப்பா!? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 11, 2021

Comments:0

அண்ணா பல்கலை பிரிப்பா!?

புதிய கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்க்க வேண்டிய நிலையில், அண்ணா பல்கலையை பிரிப்பதா, வேண்டாமா என, தமிழக உயர் கல்வித்துறை முடிவெடுக்க முடியாமல், குழப்பத்தில் உள்ளது. அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, கணினி வழியில் நடத்தப்பட்ட, 'ஆன்லைன்' தேர்வுகளுக்கு மாற்றாக, நேரடி எழுத்து தேர்வுகள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும், 14ம் தேதி துவங்க உள்ளன.இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு பிறப்பதால், இப்பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், அண்ணா பல்கலையை, கடந்த ஆட்சியில் இரண்டாக பிரித்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதா அல்லது பழைய முறைப்படியே, பல்கலையை நடத்துவதா என, உயர் கல்வித்துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.முதல்வராக இ.பி.எஸ்., இருந்தபோது, சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை என்றும், மற்ற இன்ஜினியரிங் கல்லுாரிகளை சேர்த்து, தனியாக அண்ணா பல்கலை என்றும், இரண்டாக பிரிக்க, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, 'மண்டல அளவில் அண்ணா பல்கலையை பிரிக்கலாம்' என, அப்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த பொன்முடி, சட்டசபையில் வலியுறுத்தினார். இந்த மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உயர் கல்வி அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகிக்கிறார். அவர், அண்ணா பல்கலை விவகாரத்தில், என்ன மாற்றம் செய்ய உள்ளார் என, இன்ஜினியரிங் கல்லுாரிகள் எதிர்பார்ப்பில் உள்ளன. அதன்பிறகே, மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளலாம் என, சில கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. தி.மு.க., ஆட்சி காலத்தில், 2007 முதல் இருந்தது போல, மண்டல அளவில் பல்கலைகளை பிரிப்பதா அல்லது இ.பி.எஸ்., ஆட்சி காலத்தில், இரண்டாக பல்கலையை பிரித்ததை நடைமுறைப் படுத்துவதா என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011ல் மேற்கொண்ட நடவடிக்கைப்படி, அண்ணா பல்கலையை, ஒரே பல்கலையாக நடத்துவதா என்றும் ஆலோசனை நடந்து வருகிறது. புதிய துணை வேந்தர் தேர்வு, மாணவர் சேர்க்கை, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது போன்ற பணிகள் துவங்க உள்ளதால், பல்கலையை பிரிப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews