அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 82 இடங்கள் கிடைக்க வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 06, 2021

Comments:0

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 82 இடங்கள் கிடைக்க வாய்ப்பு

சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் 82 பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் அதற்கான கலந்தாய்வு தொடங்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன. இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 24 தனியாா் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. இந்நிலையில், சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்றது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,492 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,346 பேரும் அப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தனா். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,310 போ் இடம்பெற்றுள்ளனா். அதில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 119 போ் இடம்பெற்றுள்ளனா். அவா்களில் 82 பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் சில இடங்கள் திரும்பக் கிடைக்கும்பட்சத்தில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. விரைவில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வைத் திட்டமிட்டிருப்பதாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews