Breaking

Saturday, February 06, 2021

விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்: செங்கோட்டையன்

விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்பதால் கரோனா குறித்த அச்சம் தேவையில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைக்கு உள்பட்ட முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளியாகத் தொடக்கி வைக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு சாதனை சரித்திரங்களைப் படைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக விவசாயிகளின் நலன் கருதி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நமது அரசியல் வரலாற்றில் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்களின் கோரிக்கை, விவசாயிகளின் கோரிக்கைகள் அறிவிப்பது வழக்கம். ஆனால் தமிழக வரலாற்றில் விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டு வரலாற்றைப் படைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வர் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ஆசியா முதன்முதலாக கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி டெல்டா பகுதிகளை சிறப்பு மண்டலமாக அறிவித்து விவசாயிகளைப் பாதுகாக்கிறது. வறட்சிப் பகுதியாக இருக்கும் பகுதிகளில் குடிமராமாத்துத் திட்டங்களையும், அத்திக்கடவு-அவிநாசி உள்ளிட்ட திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வரையில் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறது தமிழக அரசு. ஆளுமைத்திறனில் நமது மாநிலம் மட்டும்தான் முதலிடத்தில் உள்ளது என்றார். இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு கரோனா நோய்த தொற்று ஏற்படுவது தொடர்பான கேள்விக்கு, பள்ளிகள், நடைபெறவேண்டும், அண்டை மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் படிப்படியாகத்தான் திறக்கப்பட்டு வருகிறோம். விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளி வரலாம் என்று தெரிவித்துள்ளதால் கரோனா குறித்த அச்சம் தேவையில்லை என்றார். இந்த சந்திப்பின்போது, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog